மக்களின் சகல பிரச்சினைகளுக்கும் தீர்வு; அதில் ஏற்றத்தாழ்வுகள் எதுவும் வேண்டாம் – சஜித் சுட்டிக்காட்டு

491628a0 7713ca54 sajith 850x460 acf cropped 1
491628a0 7713ca54 sajith 850x460 acf cropped 1

மக்களின் அனைத்துப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட வேண்டும். அவற்றில் அடிப்படைப் பிரச்சினைகள், தேசிய பிரச்சினைகள் என்று ஏற்றத்தாழ்வுகள் பார்த்தால் முரண்பாடுகள் மாத்திரமே மிகுதியாகும்.என்று எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

மொனராகலை – புத்தள ஒக்கம்பிடிய பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற ‘எதிர்க்கட்சியின் நடமாடும் சேவை’ கூட்டத்தில்  உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:-

எதிர்க்கட்சியின் செயற்பாடு முரண்பாடுகளை ஏற்படுத்துவது என அநேகமானோர் கருதுகின்றார்கள். வரலாற்றில் இதுவரை காலமும் செயற்பட்ட எதிர்க்கட்சிகளைக் கருத்தில்கொண்டு அவர்கள் அவ்வாறான நிலைப்பாட்டில் உள்ளார்கள். இருப்பினும் ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான எதிர்க்கட்சி மாறுப்பட்ட எதிர்க்கட்சியாகச்  செயற்படும்.

அரசின் தவறான செயற்பாடுகளுக்கு எதிர்ப்பை வெளிப்படுத்துவோம். சிறிய எதிர்க்கட்சியாகச் செயற்பட்டு நாடு தழுவிய ரீதியில் ஜனநாயகத்துக்கான போராட்டத்தை முன்னெடுக்க முடியும். பிரச்சினைகளை ஏற்படுத்தி தவறான வழியில் இலக்கை அடைவது எதிர்க்கட்சியின் செயற்பாடல்ல.

மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு எதிர்க்கட்சியாகச் செயற்பட்டும் தீர்வைப் பெற்றுக்கொடுக்க முடியும். மக்களின் பிரச்சினைகளைப் பகிரங்கப்படுத்தி அதனை உயர்மட்ட அரசியல் வரை எம்மால் கொண்டு செல்ல முடியும்.

நாட்டு மக்களின் பிரச்சினைகள் குறித்து ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான எதிர்க்கட்சி கவனம் செலுத்தும். அரசின் அனைத்துச் செயற்பாடுகளையும் எதிர்க்க வேண்டிய தேவை எமக்குக் கிடையாது.

தேசிய பிரச்சினை குறித்து எதிர்க்கட்சித் தலைவர் பேச வேண்டும், ஏனைய பிரச்சினை குறித்து ஏனையோர் பேச வேண்டும் என அரசியல் களத்தின் பிரதிவாதிகள் தெரிவிக்கின்றார்கள்.

நாட்டு மக்களின் பிரச்சினைகளை தேசிய பிரச்சினை என்ற கோணத்திலேயே நான் பார்ப்பேன். தேசிய பிரச்சினை, மாகாண பிரச்சினை, மாவட்ட பிரச்சினை, பிரதேச பிரச்சினை என்ற வேறுபாடுகள் ஏதும் கிடையாது.

மக்களின் அனைத்துப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட வேண்டும். அவற்றில் அடிப்படைப் பிரச்சினைகள், தேசிய பிரச்சினைகள் என்று ஏற்றத்தாழ்வுகள் பார்த்தால் முரண்பாடுகள் மாத்திரமே மிகுதியாகும். நாம் மக்கள் மத்தியில் செல்லும்போது அவர்கள் தங்களின் பிரச்சினைகளைக் கூறுகின்றார்கள். அதிகாரம் இல்லாவிடினும் எம்மால் ஒரு தீர்வைப் பெற்றுத்தர முடியும் என்று அவர்கள் எதிர்பார்க்கின்றார்கள்.ஆகவே, மக்களின் அடிப்படைப்
 பிரச்சினைகளையும் தேசிய பிரச்சினையாகவே கருதுவேன். பிரச்சினைகளை ஒருபோதும் வேறுபடுத்திப் பார்க்க முடியாது என குறிப்பிட்டார்.