ரஞ்சன் ராமநாயக்கவிற்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது- சுமந்திரன்

sumanthiran500
sumanthiran500

நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான சட்டங்கள் இயற்றப்படுவதில் இருக்கும் வெற்றிடத்தினால் நேர்மையான மக்கள் பிரதிநிதிக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளரும் ,நாடாளுமன்ற உறுப்பினருமான சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

ரஞ்சன் ராமநாயக்கவின் நீதிமன்ற அவமதிப்பு தீர்ப்பு தொடர்பான தமது கருத்தினை இன்று (19) நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில்,  சுமந்திரன் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

குறித்த அமர்வில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “ரஞ்சன் ராமநாயக்க  குறித்த வழக்கில்  நானே அவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி என்பதை தெரியப்படுத்திக்கொள்கின்றேன்.

நேர்மையானதொரு அரசியல்வாதியின் சார்பில் நான் அவ்வழக்கினை முன்னெடுத்ததில் பெருமையடைகின்றேன். துரதிஷ்டவசமாக அவர் குற்றவாளியென தீர்ப்பளிக்கப்பட்டு நான்கு வருட கடூழிய தண்டனை விதிக்கப்பட்டது.

நீதிமன்ற அவமதிப்பு தொடர்பாக சட்டங்கள் இயற்றப்படாத காரணத்தினால்  நாடாளுமன்றம் இதற்கு பொறுப்பு கூற வேண்டியது மிகவும் அவசியமாகும்.

நீண்ட காலமாக இவ்வாறான நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான சட்டங்கள் இயற்றப்பட வேண்டிய தேவையிருந்தும், பொதுநல நோக்கோடு அநேக வரைபுகள் வரையப்பட்டும் சட்டங்கள் இயற்றப்படவில்லை. எனவே காட்டுக்கழுதைக்கு கிடைத்த சுதந்திரம் போல எவரும் எதனையும் தீர்ப்பளிக்க கூடியதொரு சூழ்நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.

மேலும் உள்ளூர் சட்டங்கள் இயற்றப்படாத நிலையில் ஆங்கில சட்டமே நடைமுறையில் கடைபிடிக்கப்படுவதாலும், ஆங்கில சட்டத்தில் இப்படியான கூற்றுக்கள் நீதிமன்ற அவதூறாக கணிக்கப்படுவதில்லை என்பதனை கருத்தில் கொள்ளாது, குறித்த தீர்ப்பினை அளித்தது தவறானதொரு போக்கு என்பதே தமது நிலைப்பாடு.

அத்துடன் நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான சட்டங்கள் இயற்றப்படுவதில் இருக்கும் வெற்றிடமானது நேர்மையானதொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு அசாதாரணமுறையில் அநீதி இழைக்கப்பட வழி வகுத்துள்ளது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.