தமிழரின் மத மற்றும் கலாசார மரபுரிமைகளை ஒடுக்கமாட்டோம்! – இராஜாங்க அமைச்சர் விதுர உறுதி

download 2 5
download 2 5

வடக்கு, கிழக்கில் தமிழ் மக்களின் மத மற்றும் கலாசார மரபுரிமைகளை ஒடுக்கும் வகையில் தொல்பொருள் ஆய்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படமாட்டாது.என்று தேசிய மரபுரிமைகள், அருங்கலைகள் மற்றும் கிராமிய சிற்பக்கலைகள் மேம்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்தார்.

குருந்தூர் மலை தொல்பொருள் அகழ்வுப் பணிகள் தொடர்பில் ஊடகவியலாளர்களிடம் கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

முல்லைத்தீவு மாவட்டத்தில் குருந்தூர் மற்றும் மணலாறு – படலைக்கல்லு பகுதிகளில் பௌத்த விகாரைகள் மற்றும் பௌத்த துறவிகள் வாழ்ந்தமைக்கான சான்றாதாரங்கள் கிடைக்கப் பெற்றதைத் தொடர்ந்து தொல்லியல் திணைக்களம் அகழ்வாராய்ச்சி நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.

இந்த ஜாத் சம்பவத்தை கொண்டு வடக்கு மற்றும் கிழக்கு அரசியல்வாதிகள் தவறான கருத்துக்களை வெளியிடுகின்றனர்.

தமிழ் மக்களின் மதம் மற்றும் கலாசார அம்சங்களை ஒடுக்க வேண்டிய தேவை அரசுக்குக் கிடையாது. இந்தப் பிரதேசம் தொல்லியல் பகுதியாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது என்பதால் ஆராய்ச்சி நடவடிக்கைகளை முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மாத்திரமல்ல அனைத்து மாகாணங்களிலும் வரலாற்றுச் சின்னங்கள் புதைந்துள்ளன.

தேசிய மரபுரிமைகளைப் பாதுகாக்கும் பொறுப்பு நாட்டு மக்கள் அனைவருக்கும் உண்டு. இவ்விடயத்தில் இனம், மதம் ஆகிய காரணிகளைக் கொண்டு செயற்பட முடியாது.

எதிர்காலச் சந்ததியினருக்காகத் தேசிய மரபுரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காகவே தேசிய மரபுரிமைகள் தொடர்பில் பிரத்தியேகமாக இராஜாங்க அமைச்சு உருவாக்கப்பட்டுள்ளது.

பௌத்த மதத்தில் மரபுரிமைகளை மாத்திரம் பாதுகாப்பது எமது நோக்கமல்ல. அனைத்து இனத்தவர்களின் மரபுரிமைகளும் பாதுகாக்கப்படும்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பௌத்த விகாரைகளை நிறுவ தமிழ் மக்களின் காணிகள் அபகரிக்கப்படுகின்றன என்று தமிழ் அரசியல்வாதிகள் குறிப்பிடும் கருத்து முற்றிலும் தவறானதாகும்.

அரசியல் நோக்கங்களுக்காக இவர்கள் இனங்களுக்கிடையில் தவறான எண்ணப்பாட்டைத் தோற்றுவிக்கின்றார்கள். ஆகவே, குருந்தூர் மலை விவகாரத்தில் தமிழ் மக்களின் மத உரிமைகள் ஏதும் ஒடுக்கப்படவில்லை” – என்றார்.