இந்திய மீனவர்களின் உயிரிழப்பின் எதிரொலியாக யாழ்ப்பாண இந்தியத் துணைத் தூதரகத்தில் இடம்பெறவிருந்த குடியரசுத் தினக் கொண்டாட்டம் இரத்துச் செய்யப்பட்டது என அறியவருகின்றது.
இந்திய மீனவர்கள் பயணித்த படகு கடந்த 18ஆம் திகதி நெடுந்தீவு அருகே இடம்பெற்ற சம்பவத்தில் தகர்ந்தது. இந்திய மீன்பிடிப் படகில் பயணித்த நால்வரும் உயிரிழந்தனர். அவர்களின் சடலங்கள் தற்போது வரையில் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் உள்ளன. இதனால் ஏற்பட்ட சர்ச்சையும் பதற்றமும் தமிழகத்தில் தொடர்ந்தும் நீடிக்கின்றன.
இந்தநிலையில், இதற்கான எதிர்ப்பைத் தெரிவிக்கும் நோக்கிலும், இந்த மீனவர்களின் இறப்பின் துயரில் பங்கெடுக்கும் வகையிலும் எதிர்வரும் 26ஆம் திகதி இந்தியாவின் குடியரசுத் தினக் கொண்டாட்ட நிகழ்வு இரத்துச் செய்யப்படுவதாக அறியவருகின்றது.
இந்தக் கொண்டாட்டம் யாழில் உள்ள இந்தியத் துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் இங்கும் மிகவும் கோலாகலமாக இடம்பெறுவது வழமை.
இந்த ஆண்டு கொரோனா காலத்தில் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இதனை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டபோதும் அரசியல் சூழல் காரணமாக குடியரசுத் தினக் கோலாகலம் இரத்துச் செய்யப்பட்டுள்ளது என நம்பகரமாகத் தெரியவருகின்றது.
இராஜதந்திர நிகழ்வுகள், நெருக்கடிகள் காரணமாக இலங்கை – இந்திய அரசியலிலும் உறவிலும் பெரும் பரபரப்பு நிவுவதும் குறிப்பிடத்தக்கது.