மஹிந்த தலைமையிலான ‘மொட்டு’க் கூட்டணியை எவராலும் பிளவுபடுத்த முடியாது! – கெஹலிய திட்டவட்டம்

kekaliya
kekaliya

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவராகவும், அந்தக் கட்சி தலைமையிலான கூட்டணியின் தலைவராகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்சவே உள்ளார். எனவே, இந்தப் பலமிக்க கூட்டணியை எவராலும் பிளவுபடுத்த முடியாது.

என்று ஊடகத்துறை வெகுஜன அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைமைத்துவம் மாற்றப்பட வேண்டும் என அமைச்சர் விமல் வீரவன்ச கூறியுள்ள கருத்துத் தொடர்பில் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி என்பது ஒரு பரந்த கூட்டணியாகும். எனவே, இதன் உறுப்பினர்களுக்கு வெவ்வேறு கருத்துக்களை – கோரிக்கைகளை முன்வைப்பதற்கு உரிமை இருக்கின்றது. அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு மாத்திரமல்ல சகலருக்கும் அந்த உரிமை உண்டு. எனினும், அவை தொடர்பான இறுதித் தீர்மானம் கட்சியின் உயர்மட்டத்திலேயே எடுக்கப்படும்.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவராகவும், அந்தக் கட்சி தலைமையிலான கூட்டணியின் தலைவராகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்சவே உள்ளார். தலைவரை மாற்றும் உத்தேசம் இதுவரைக்கும் இல்லை.

மஹிந்த ராஜபக்ச தலைமையிலான இந்தப் பலமிக்க கூட்டணியை எவராலும் பிளவுபடுத்த முடியாது – என்றார்.