பயங்கரவாதிகளுக்குப் புத்துயிரூட்ட வடக்கின் தமிழ் ஊடகங்கள் முயற்சி;கோட்டா அரசு புதிய கண்டுபிடிப்பு!

kekaliya 720x450 1
kekaliya 720x450 1

“வடக்கில் உள்ள தமிழ் ஊடகங்கள் பயங்கரவாதிகளை நினைவுகூர்ந்தும், பயங்கரவாதிகளுக்குப் புத்துயிர் கொடுக்கும் வகையிலும் செயற்படுகின்றன. பயங்கரவாதிகளின் தலைவரை வாழ்த்தும் வகையில் செய்தி வெளியிட்டமைக்காக வடக்கு ஊடகம் ஒன்று வழக்கை எதிர்கொண்டுள்ளது. பயங்கரவாதிகளுக்குத் துணைபோவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.”என அமைச்சரவைப் பேச்சாளரும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் தெரிவித்ததாவது:-

“பயங்கரவாதத்துக்குப் புத்துயிர் கொடுக்கும் வகையில் செயற்படும் ஊடகங்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

முக்கியமாக வடக்கில் உள்ள தமிழ் ஊடகங்கள் பயங்கரவாதிகளை நினைவுகூர்ந்தும், பயங்கரவாதிகளுக்குப் புத்துயிர் கொடுக்கும் வகையிலும், பயங்கரவாதிகளுக்குத் துணைபோகும் அரசியல்வாதிகளினதும் கட்டுரைகளையும், செய்திகளையும் பிரசுரித்து வருகின்றன.

ஊடகங்கள் நடுநிலையுடன் செயற்பட வேண்டும். பயங்கரவாதத்துக்குத் துணைபோனால் நாட்டின் சட்டத்துக்கு அமைய அவற்றின் மீது நடவடிக்கை எடுக்கப்படும். வடக்கில் ஒரு ஊடகம் பயங்கரவாதிகளின் தலைவர் பிரபாகரனை வாழ்த்தும் வகையில் செய்தி வெளியிட்டமைக்காக நீதிமன்றில் வழக்கு விசாரணையை எதிர்கொண்டுள்ளது.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளைப் புகழ்ந்து அந்த அமைப்புக்கு ஆதரவாகச் செயற்படும் ஊடகங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதேவேளை நாட்டில் சில தனியார் அமைப்புக்களும் பயங்கரவாதத்துக்குத் துணைபோகும் வகையில் செயற்படுகின்றன.

ஐ.நா. மனித உரிமைகள் சபையின் கூட்டத் தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில், நாட்டின் சட்டத்தை மீறியதாக இந்த அமைப்புக்களின் செயற்பாடுகள் உள்ளன. அந்த அமைப்புக்களும் நாட்டின் சட்டத்துக்கு அமையவே செயற்பட வேண்டும்” – என்றார்.