இலங்கையில் விக்னேஸ்வரனைப் போன்ற சிந்தனையில் உள்ள இந்திய மாநில முதலமைச்சர் ஒருவரே பாரதிய ஜனதா கட்சி இங்கு ஆட்சியமைக்கும் என்ற கருத்தைக் கூறியுள்ளார் என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.
பாரதிய ஜனதா கட்சி இலங்கையில் ஆட்சியமைக்கும் திட்டத்தில் இருக்கின்றது எனத் தெரிவிக்கப்பட்ட கருத்துக்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
விக்னேஸ்வரன் வடக்கு மாகாண சபை முதலமைச்சராக இருக்கும்போது, வடக்கில் சிங்கள மக்கள் வாழ்க்கை நடத்த உரிமை இல்லை எனத் தெரிவித்திருந்தார். அவ்வாறான இந்திய முதலமைச்சர் ஒருவரே இதனையும் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் அரசியல் கட்சியொன்றை அமைத்து, ஆட்சிப்பீடமேறுவதாக இந்திய மாநில முதலமைச்சர் ஒருவர் மாத்திரமே கூறியுள்ளார். அது இந்தியாவின் உத்தியோகபூர்வ நிலைப்பாடல்ல.
இறையாண்மையுடன் உள்ள ஒரு நாட்டுக்கு அவ்வாறான எச்சரிக்கைகளை விடுக்க முடியாது.
நாம் நாட்டின் இறையாண்மையைப் பாதுகாத்துக்கொண்டு செயற்படுவோம் – என்றார்.