விவசாயிகளின் தேவைகளை பூர்த்தி செய்து கொடுத்த பின் நெல்லை கொள்வனவு செய்வது பொருத்தமாக இருக்கும்- செல்வம்

selvam mp
selvam mp

விவசாயிகள் தொடர்ந்தும் பல்வேறு அசௌகரியங்களுக்கும், அழிவுகளுக்கும் முகம் கொடுத்து வருகின்ற நிலையில் விவசாயிகளுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் அரசாங்கம் செய்து கொடுத்த பின் விவசாயிகளிடம் இருந்து தேவையான நெல்லை கொள்வனவு செய்வது பொருத்தமாக இருக்கும் என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

மன்னாரில் இன்று சனிக்கிழமை(20) காலை இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,,,,

விவசாயிகள் அனைவரும் இரவு பகல் பாராமல் தூக்கத்தை தொலைத்து கடன் பட்டு நகைகளை அடகு வைத்து விவசாயத்தை மேற் கொண்டு வருகின்றார்கள்.

இவர்களிடன் உரமானியத்தை காரணம் காட்டி குறிப்பிட்ட அளவு நெல் கொள்வனவு செய்வது விவசாயிகளை மீண்டும் எழ்மை நிலைக்கு தள்ளி விடும் செயற்பாடாகும்.

விவசாயிகளின் நலனில் அக்கறை இருந்தால் உரமானியத்தை காரணம் காட்டி அவர்களிடமிருந்து நெல் கொள்வனவு செய்வது தற்போது கைவிடப்பட வேண்டும்.

ஏனெனில் விவசாய பயிர்ச் செய்கையின் ஆரம்ப காலங்களில் பெய்த மழை காரணமாக அதிக அளவில் அழிவுகளும் இழப்புக்களும் விவசாய செய்கைக்கு ஏற்பட்டுள்ளது.

எதிர் பார்த்த அளவில் விளைச்சலும் இல்லை. நெல் சந்தைப்படுத்தல் சபை கேட்பது போல் காய வைக்கும் அளவிற்கு தள வசதிகள் இல்லை.அதிகலவான விவசாயிகள் வீதி ஓரங்களிலே நெல்லை காய வைக்கும் நிலையை நாங்கள் பார்க்கின்றோம்.

அத்துடன் அதிகளவான நெல்லை பாதுகாத்து வைக்கும் களஞ்சியங்கள் இல்லை. மேலும் விவசாயிகள் நெல் வைக்கப்பட்ட இடத்திலிருந்து நெல் கொடுக்கப்படும் இடங்கள் வெகு தூரத்தில் உள்ளது.

இதனால் போக்கு வரத்து செலவு இரட்டிப்பாகின்றது. இதே நேரம் தனியார் அறுவடை செய்யும் வயல் அருகில் வந்து பச்சையாக நெல் கொள்வனவு செய்வதால் விவசாயிகளின் சுமை ஓரளவிற்கேனும் குறைக்கப்படுவதாக பெருமளவிலான விவசாயிகள் தெரிவிக்கின்றார்கள்.

எனவே விவசாயிகளுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுத்த பின் விவசாயிகளிடம் இருந்து தேவையான நெல்லை கொள்வனவு செய்வது பொருத்தமாக இருக்கும்.என அவர் மேலும் தெரிவித்தார்.