தமிழ்தரப்பு ஒற்றுமையான முன்னெடுப்புக்களை செய்யவேண்டும்- சுமந்திரன்

m.a.sumanthiran 1 800x445 1
m.a.sumanthiran 1 800x445 1

தமிழ் மக்களிற்கு எதிரான நடவடிக்கைகளை எதிர்கொள்வது என்ற விடயத்திலே காலத்தின் கட்டாயமாக தமிழர்தரப்பு ஒற்றுமையான முன்னெடுப்புக்களை செய்யவேண்டும் என்பதை கட்சியின் மத்திய செயற்குழு ஏற்று அங்கிகரித்துள்ளதாக தமிழரசுகட்சியின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்

தமிழரசுகட்சியின் மத்தியசெயற்குழு கூட்டம் வவுனியா குருமன்காட்டில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று (27) இடம்பெற்றது.

இதன் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.


தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
ஒற்றுமையான முன்னெடுப்பு என்பது அரசியல் கூட்டோ தேர்தல் கூட்டோஅல்ல. தமிழர்களிற்கு எதிரான விடயங்களில் அனைத்து தரப்புகளும் ஒன்று சேர வேண்டிய தேவை இருக்கிறது. தமிழ்மக்கள் மத்தியிலே இது தொடர்பான எதிர்பார்ப்புகளும் இருக்கிறது. எனவே அரசியல் தலைமைத்துவம் கொடுக்கவேண்டியது எங்களது பொறுப்பு. அந்த பொறுப்பை நிறைவேற்றுவதை அரசியலுக்காக செய்கிறோம் என்று சொன்னால் அதனை ஏற்கமுடியாது. 

அத்துடன் இலங்கை தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்படுவது குறித்து இன்று பேசினோம். மனித உரிமை பேரவை தனக்கு உரிய அதிகார வரம்புகளை பயன்படுத்தி தமது வார்த்தை பிரயோகங்களிற்கு ஊடாக சில முக்கியமான விடயங்களை இந்த வரைபிற்குள்ளே உள்டக்கியிருக்கிறார்கள்.  இலங்கை தொடர்பான விடயம் சர்வதேச மேற்பார்வையின் கீழே தொடர்ச்சியாக இருக்கவேண்டும். அந்ததீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கான செயற்பாடுகளை இணை அனுசரணை நாடுகளுடன் சேர்ந்து எடுத்திருக்கிறோம். 


இந்த அரசாங்கத்தின் போக்கு தமிழர்களிற்கு எதிராக இருக்கிறது என்பது தெரிந்த விடயம். தற்போது அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் திட்டங்கள் எமது மக்களின் வாழ்க்கையை பாதிக்கின்றது. இருப்பை பாதிக்கின்றது. தொல்லியல் திணைக்களம் வனவளத்திணைக்களம் ஆகியன முன்னெடுக்கப்படும் கஸ்ரங்களை என்ன விதத்தில் எதிர்கொள்ளலாம் என்ற விடயம் தொடர்பாகவும் நாம் கலந்துரையாடியிருந்தோம்.

அத்துடன் உள்ளூராட்சி மன்றங்களில் ஏற்பட்ட பிணக்குகள் தொடர்பாகவும் வரவுசெலவுத்திட்டங்களிற்கு எதிராக வாக்களித்த கட்சி உறுப்பினர்களிற்கு ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பது சம்மந்தமாக நாங்கள் பேசியிருக்கிறோம். கட்சி பலப்படுத்தப்படவேண்டிய தேவை இருக்கிறது அதனை ஆராய்ந்து நடவடிக்கைகளை எடுப்போம். 
புதிய அரசியல் அமைப்பு தொடர்பாக ஜனாதிபதியால் உருவாக்கப்பட்ட குழுவிற்கு எமது பிரேரணைகளை முன்வைத்திருந்தோம். அதனடிப்படையில் அவர்களுடன் ஒரு சந்திப்பு இடம்பெற்றிருந்தது. மூன்றாவது குடியரசு அரசியலைப்பு ஒன்று உருவாக்கப்பட வேண்டுமாக இருந்தால் அது தமிழ்தேசிய பிரச்சினைக்கு முழுமையான தீர்வை உள்ளடக்கியதானவகையில் இருக்கவேண்டியதன் அவசியத்தை சம்பந்தன் ஐயா அவர்கள் வலியுறுத்தி பேசியிருந்தார். இதனால் நன்மை வருமா இல்லையா என்பது எங்களுக்கு தெரியாது. 

பொலிகண்டி பேரணியை ஏற்படுத்திய சிவில் அமைப்புகள் அது எதற்காக நடாத்தப்படுவதாக தெரிவித்து 10 காரணிகளை பலதரப்பிற்கும் அனுப்பியிருந்தது. அந்த கோரிக்கைகளை முன்வைத்தே அது ஆரம்பிக்கப்பட்டது. அதிலே சர்வதேச நீதிமன்ற பொறிமுறை பற்றி எதுவுமே சொல்லப்பட்டிருக்கவில்லை. அதனால் நாங்கள் அதற்கு எதிர்ப்பு என்று அர்த்தம் இல்லை. எனவே குறித்த சில காரணங்களை வைத்து ஆதரவை திரட்டிவிட்டு வேறுகாரணங்களை சொல்வது நியாயமற்றவிடயம் அதையே நாங்கள் சொல்லியிருந்தோம். உறுப்பு நாடுகளிற்கு நாம் அனுப்பிய கடிதத்திலே இந்தவிடயம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றிற்கு பாரப்படுத்த வேண்டும் என்று தெளிவாக சொல்லியிருக்கிறோம். அதற்கு மாறானவர்கள் அல்ல நாங்கள். 

தமிழ் மக்கள் பேரவை தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு…  தமிழ் மக்கள் பேரவை என்ற ஒன்று இப்போது இருப்பதாக எனக்கு தெரியாது என்று பதிலளித்தார்.