தேசிய வளங்களை விற்பனை செய்யும் நடவடிக்கையை ஐக்கிய மக்கள் சக்தி ஒரு போதும் அனுமதிக்காது என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
கேகாலையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
ஒரு நாடு வடக்கை கேட்கின்றது. – மற்றொரு நாடு தெற்கை கேட்கின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
மற்றுமொரு நாடு தங்களுக்கு கிழக்கு வேண்டும் என்றும், இன்னும் ஒரு நாடு தங்களுக்கு மேற்கு வேண்டும் என்று கேட்குமாயின், மாகாணங்களை பிரிக்கவேண்டி ஏற்படுவதுடன், தேசிய வளங்களையும் பிரிக்கவேண்டியதாக இருக்கும்.
இந்த நிலையில், ஐக்கிய மக்கள் சக்தி, எந்த சந்தர்ப்பத்திலும், எந்த ஒரு தேசிய வளத்தையும் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்காது என்பதை மிகத் தெளிவாக கூறிக் கொள்வதாக சஜித் பிரேமதாஸ குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் தேசிய வளங்களை விற்பனை செய்யும் அரசாங்கத்தின் இந்த கொள்ளையை தோற்கடிப்பதற்கு நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேநேரம், அரசாங்கத்தில் உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசிக்கு மேலதிகமாக, உண்மையான தேசாபிமான தடுப்பூசியையும் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.