புதிய அரசமைப்பின் ஊடாக அதிகாரப் பரவலாக்கலை சுதந்திரக் கட்சி ஆதரிக்கும் – பரிந்துரையில் தெரிவிப்பு

Nimal.Siripala.Desilva
Nimal.Siripala.Desilva

இலங்கையின் புதிய அரசமைப்பின் ஊடாக அதிகாரப் பரவலாக்கல் கோட்பாட்டை தாம் ஆதரிப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.

இலங்கையின் புதிய அரசமைப்பு வரைவுக்கான ஆலோசனைகளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நேற்று சமர்ப்பித்துள்ளது.

அதிகாரப் பரவலாக்கத்தின் ஊடாக மாகாண சபைகளுக்கு மேலதிகமாக மாவட்ட சபை மற்றும் முன்னர் இருந்த செனட் சபை முறைகளையும் தாம் பரிந்துரைத்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினரான அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

உறுப்பினர்களையும் துறைசார் பிரதிநிதிகளையும் உள்ளடக்கி மேற்படி சபைகள் அமைக்கப்பட வேண்டும் என்று எமது கட்சி பரிந்துரைத்துள்ளது.

அத்தோடு, தேர்தல்களில் விருப்பு வாக்கு முறையும் இல்லாதொழிக்கப்பட வேண்டும் என்று நாம் முன்மொழிந்துள்ளோம்.

தற்போதுள்ள அரசமைப்பில் அடிப்படை மனித உரிமைகள் தொடர்பான பிரிவில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளோம்.

பௌத்த மதத்துக்கு முன்னுரிமை, விலங்குகள் – சுற்றாடல் பாதுகாப்பு போன்ற விடயங்கள் ஆகியனவும் புதிய அரசமைப்பில் உட்சேர்க்கப்பட வேண்டும் என்றும் கோரியுள்ளோம் – என்றார்.