மணியை உடன் விடுதலை செய்யுங்கள்! – அரசிடம் ரெலோ வலியுறுத்து

அடைக்கலநாதன் 2
அடைக்கலநாதன் 2


பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ள யாழ்ப்பாணம் மாநகர சபையின் முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பில் ரெலோவின் தலைவரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் விடுத்துள்ள கண்டன அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

“தமிழர்களின் நிர்வாகத் திறமையைச் சகித்துக்கொள்ள முடியாத சிங்கள அரசு யாழ், மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணனைக் கைதுசெய்துள்ளது. இதை நாம் மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

இத்தனை வருடங்களாக ஆட்சி செய்து கொண்டிருக்கும் இந்த அரசால் ஒரு மாநகர சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்திருக்கும் செயற்பாட்டை  அவர்களால் செய்ய முடியவில்லை. அதனை ஒரு தமிழன் செய்து விட்டான் என்ற காழ்ப்புணர்ச்சியில் இந்தக் கைது நாடகம் அரங்கேறியுள்ளது.

சீருடை காரணமாக யாழ். மாநகர காவல் படையைத் தடை செய்து முதல்வர் மணிவண்ணனைக் கைதுசெய்துள்ளது சிறுபிள்ளைத்தனமாக உள்ளது.

யாழ். மாநகர காவல் படையினரின் இதே வகையிலான சீருடை கொழும்பு மாநகர சபையிலும் உள்ளது என யாழ். மாநகர முதல்வர் மணிவண்ணன் விளக்கம் அளித்திருந்தார்.

அவ்வாறு விளக்கமளித்தும் அவரைக் கைதுசெய்திருப்பது இந்த அரசு தமிழர்கள் எந்த வகையிலும் முன்னேறி விடக் கூடாது என்பதில் உறுதியாக இருப்பதை எடுத்துக்காட்டுகின்றது.

சாதாரண சீருடையைப் பார்த்து அரசு அச்சம் கொள்வது எதற்காக என்று எமக்குத் தெரியவில்லை. எனவே, கைதுசெய்யப்பட்டுள்ள யாழ். மாநகர மேயர் மணிவண்ணனை உடனடியாக விடுதலை செய்வதோடு யாழ். மாநகரை சுத்தப்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட மாநகர காவல் படை சுதந்திரமாக இயங்குவதற்கும் அரசு அனுமதிக்க வேண்டும்” – என்றுள்ளது.