இராணுவத் தளபதிக்கு எதிராக போர்க் குற்ற ஆவணம் தாக்கல்: பிரிட்டனிடம் 50 பக்கக் கோவையைச் சமர்ப்பித்தார் யஸ்மின் சூக்கா!

jasmin sookka
jasmin sookka

போர்க்குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ள இலங்கை இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா குறித்த 50 பக்க ஆவணக் கோவையைத் தொகுத்து அதனை பிரிட்டன் வெளிநாட்டு பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகத்தின் தடைகள் திணைக்களத்துக்கு சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்திட்டம் சமர்ப்பித்துள்ளது.

இந்தச் சமர்ப்பிப்பு இலங்கையின் தற்போதைய இராணுவத் தளபதியாக இருக்கும் சவேந்திர சில்வா 06 ஜுலை 2020 இல் உருவாக்கப்பட்ட ஐக்கிய இராச்சியத்தின் உலகளாவிய மனித உரிமைகள் தடை பொறிமுறையின் கீழ் ஏன் கண்டிக்கப்பட வேண்டும்? என வாதிடுகின்றது.

எங்களிடம் இலங்கையின் போரின் இறுதிக்கட்டம் பற்றி கவனமானமுறையில் சர்வதேச வழக்கறிஞர்கள் மற்றும் சட்டவாளர்கள் மூலம் சேகரித்த ஆதாரங்களைக் கொண்ட விரிவான களஞ்சியம் ஒன்று உள்ளது. இங்கிலாந்தில் தற்போதுள்ள பல பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளின் வாக்குமூலம் இந்த சமர்ப்பிப்பை உருவாக்குவதற்கும் சவேந்திர சில்வா மற்றும் அவரது கட்டளைக்கு கீழ் இருந்தவர்களுடனும் இணைப்புகளை உருவாக்குவதற்கும் மிகவும் முக்கியமானதாக இருந்தது என சர்வதேச உண்மை மற்றும் நீதிககான செயற்திட்ட அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.

இலங்கையின் வடக்கில் 2009 இல் இடம்பெற்ற சிவில் போரின் இறுதிக் கட்டத்தின்போது 58 ஆவது படைப்பிரிவின் கட்டளைத் தளபதியாக இருந்தபோது சவேந்திர சில்வா வாழ்வுரிமை உட்பட பாரிய மனித உரிமை மீறல்களை மேற்கொள்வதில் அவரது பங்கு குறித்து சர்வதேச உண்மை மற்றும் நீதிககான செயற்திட்டத்தின் இந்தச் சமர்ப்பிப்பு விபரித்துக் கூறுகின்றது.

அது பாதுகாப்பு வலயங்கள் எனக் கூறப்பட்ட இடங்களில் அரசால் மேற்கொள்ளப்பட்ட வைத்தியசாலைகள் மற்றும் உணவுக்காக வரிசையில் நின்றவர்கள் மீதான எறிகணை மற்றும் குண்டுத் தாக்குதலில் உயிர்தப்பிய தமிழர்களின் கொடுமை நிறைந்த நேரில்கண்ட சாட்சி வாக்குமூலத்திலிருந்து இந்தச் சமர்ப்பிப்பு உருவாகின்றது.

இவர்களில் பலர் தற்போது பிரிட்டனில் அகதிகளாக வாழ்ந்து வருகிறார்கள். பிரிட்டன் அரசின் வெளிநாட்டுக் கொள்கையின் முக்கிய பகுதியாக உள்ள பாலியல் வன்புணர்வு உட்பட பாலியல் வன்முறை மற்றும் சித்திரவதையில் சில்வாவின் தொடர்பை இந்த சமர்ப்பிப்பு கவனமாக ஆராய்கின்றது.

2020 இல் அமெரிக்காவின் இராஜாங்கத் திணைக்களம் போரின் முடிவில் இடம்பெற்ற மீறல்கள் குறித்து கூறப்பட்ட அவரது வகிபாகத்திற்காக அவரைக் கடுமையாக கண்டனம் செய்தது. ஆனால், பிரிட்டனின் தடைப்பொறிமுறையின் அதிகாரவரம்பு வேலைகள் விரிவானதாக இருப்பதுடன் இராணுவத் தாக்குதலின் போது வைத்தியசாலைகள் மற்றும் பாதுகாக்கப்பட்ட ஏனைய பொதுமக்களின் இடங்கள் மீதான எறிகணைத் தாக்குதலில் அவரது பங்கை உள்ளடக்குகின்றது.

மீறல்களை முழுமையாக அங்கிகரித்தல் மற்றும் அமெரிக்காவின் நடவடிக்கைக்கு ஆதரவு கொடுத்தல் என்பன முக்கியமானது என்று சூக்கா கருத்து தெரிவித்துள்ளார்.

பிரிட்டனின் கண்டனம் பொறுப்புக்கூறல் தொடர்பில் இன்னுமொரு முக்கிய முன்னோக்கிய படியாக இருக்கும். அத்துடன் அண்மையில் ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு அமைவானதாக இருக்கும். இதற்காக பிரிட்டனே முக்கிய பங்குவகித்தது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இலங்கைக்குப் பிரிட்டனின் புதிய தடை பொறிமுறையைப் பிரயோகிப்பது தொடர்பான அரசியல் விருப்பம் அண்மைய  நாடாளுமன்ற விவாதத்தின்போது வெளிபடையாகத் தெரிந்தது.

இந்த விவாதத்தில் 11 நாடாளுமன்ற உறுப்பினர்கள் சவேந்திர சில்வா உட்பட இலங்கையின் இராணுவ அதிகாரிகளுக்கு எதிராகப் பிரிட்டன் அரசு ஏன் தடைகளை விதிக்கவில்லை? எனக் கேட்கின்றார்கள், இந்தச் சந்தர்ப்பத்தில் சவேந்திர சில்வாவின் பெயர் ஆறு தடவைகள் குறிப்பிடப்பட்டது எனவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.