வடக்கு வர்த்தகர்களின் அசௌகரியங்கள் களையப்பட வேண்டும் – டக்ளஸ்

வடக்கு மாகாணத்தினை சேர்ந்த வர்த்தகர்கள் எதிர்கொள்ளும் அசௌகரியங்கள் அனைத்திற்கும் நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் வலியுறுத்தப்பட்டுள்ளது.

வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தனவுடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே குறித்த விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

வர்த்தக அமைச்சில் இடம்பெற்ற விசேட சந்திப்பின் போது, வடக்கு வர்த்தகர்களினால் தன்னிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை வர்த்தக அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்ற கடற்றொழில் அமைச்சர், குறித்த கோரிக்கைகள் தொடர்பாக அவதானம் செலுத்தப்பட வேண்டியதன் அவசியத்தினையும் வலியுறுத்தினார்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கருத்துக்களை ஏற்றுக்கொண்ட அமைச்சர் பந்துல குணவர்த்தன, முன்னுரிமை அடிப்படையில் வடக்கு வர்த்தகர்களின் அனைத்து எதிர்பார்ப்புக்களும் நியாயமான முறையில் தீர்த்து வைக்கப்படும் என்று உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.