விவசாய உற்பத்திப் பொருட்களை நஞ்சற்றவையாக உற்பத்தி செய்வதன் மூலம் எதிர்காலத்தில் சிறந்ததோர் சமூகத்தை உருவாக்க முடியும் என்ற தொனிப்பொருளின் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் விசேட கூட்டம் ஒன்றினை ஒழுங்கு செய்திருந்தோம் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் முகப்புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த பதிவில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
மேலும் இதன்போது இவ்வாண்டு பெரும்போக நெல் உற்பத்தியின் போது அமுல் படுத்தக் கூடிய வண்ணமாக துறைசார்ந்த திணைக்கள அதிகாரிகளை அழைத்து கலந்துரையாடியிருந்தோம்.
இதில் குறிப்பாக விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் இரசாயன பொருட்களை தடை செய்து சேதனப்பசளை மற்றும் எண்ணெய்களை பயன்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதற்கான சாத்தியவள அறிக்கைகளை எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் சமர்ப்பிக்குமாறு துறை சார் அதிகாரிகளிடம் கோரியுள்ளோம். இதன் அடிப்படையில் மிகவிரைவாக இத்திட்டத்தினை நடைமுறைப்படுத்த எம்மாலான முயற்சிகளை தொடர்ந்து முன்னெடுக்கவுள்ளோம்.
இந்நிகழ்ச்சியில் அரசாங்க அதிபர் கே.கருணாகரன் உதவி அரசாங்க அதிபர் சுதர்ஷினி, பிரதேச செயலாளர்கள், உள்ளுராட்சி தவிசாளர்கள், விவசாயத் திணைக்கள அதிகாரிகள், அபிவிருத்தி குழு இணைப்பாளர்கள், விவசாய அமைப்புகள், சேதனப் பசளை உற்பத்தியாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர் என மேலும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.