வவுனியா ஆடைத்தொழிற்சாலையின் செயற்பாடுகள் குறித்து ஜனாதிபதிக்கு திலீபன் அவசர கடிதம்!

th
th

வவுனியா ஆடைத் தொழிற்சாலையின் செயற்பாடுகள் குறித்து ஜனாதிபதி, பிரதமர், சுகாதார அமைச்சர் ஆகியோருக்கு அவசர கடிதம் மூலம தெரியப்படுத்தி ஆடைத் தொழிறசாலையில் ஏற்படும் கொரோனா தொற்று பிரச்சனைக்கு ஒரு முற்றுப் புள்ளியை வைக்க நடவடிக்கை எடுப்பேன் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான கு.திலீபன் தெரிவித்துள்ளார்.

வவுனியா மாவட்ட கொரோனா நிலமை தொடர்பில் கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாடு முழுவதும் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ளது. வவுனியா மாவட்டத்திலும் அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

இதனைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் மாவட்ட மட்ட கூட்டத்தில் பல முடிவுகள் எட்டப்பட்டுள்ளது. இருந்தாலும் சுகாதார பிரிவினருக்கு ஒத்துழைப்பாக காவற்துறையினரோ அல்லது ஏனைய அரச உத்தியோகத்தர்களோ துணை போவது குறைவாக இருக்கிறது. எனவே அனைவரும் இணைந்தால் தான் கொரோனாவால் பாதுகாக்க முடியும்.

ஆடைத் தொழிற்சாலையை மூடுவதற்கு நிறைய சட்டதிட்டங்கள் உள்ளது. குறைந்தபட்சம் அங்கு வேலை செய்பவர்கள் அதிக இடைவெளிகளை பேண வேண்டும். ஆனாலும் நீங்கள் சொல்வதை என்ன கேட்பது என்ற நிலையில் தான் அவர்களது செயற்பாடும் உள்ளது.

இது தொடர்பில் ஜனாதிபதி, பிரதமர், சுகாதார அமைச்சர் ஆகியோருக்கு அவசர கடிதம் மூலம் தெரியப்படுத்தி இந்த பிரச்சனைக்கு ஒரு முற்றுப் புள்ளியை வைக்க உள்ளேன்.

அத்துடன் சுகாதார பணிமனைக்கு நிறைய தேவைகள் உள்ளன. அதனைப் பெற்றுக் கொடுக்கவும் நடவடிக்கை எடுப்பேன் எனத் தெரிவித்தார்.