கப்பல் தீ விபத்தால் இலங்கையின் சுற்றுலாத்துறை கேள்விக்குறி – அரசு தெரிவிப்பு!

image 2021 06 01 201544
image 2021 06 01 201544

கொழும்புத் துறைமுகத்துக்கு அருகாமையில் தீப்பரவி விபத்துக்குள்ளாகிய ‘எக்ஸ் – பிரஸ் பேர்ல்’ கப்பலால் நாட்டின் தேசிய பொருளதாரத்துக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என நிதி முதலீட்டு இராஜாங்க அமைச்சர் அஜிட் நிவார்ட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

இதனால் நாட்டின் சுற்றுலாத்துறையும் கேள்விக்குறியாகியுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

‘எக்ஸ் – பிரஸ் பேர்ல்’ கப்பலில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பில் மாறுபட்ட பல கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. கடற்பரப்பில் சர்வதேசக் கப்பல்கள் விபத்துக்குள்ளாவதும், அதனால் கடல் மற்றும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுவதும் இது முதல் தடவையல்ல.

உண்மையில் இந்தக் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தால் நாட்டின் தேசிய பொருளாதாரத்துக்கு ஒப்பீட்டளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் தேசிய பொருளாதாரத்தின் முதுகெலும்பாக சுற்றுலாத்துறை காணப்படுகின்றது.

ஏற்கனவே கொரோனா வைரஸால் வீழ்ச்சி கண்டுள்ள சுற்றுலாத்துறை இந்தத் தீ விபத்தால் பாதிக்கப்படும்.

அண்மையில் கிழக்கு கடற்பரப்பில் தீ விபத்துக்குள்ளாகிய கப்பலால் ஏற்பட்ட பாதிப்பை விட ‘எக்ஸ் – பிரஸ் பேர்ல்’ கப்பலால் ஏற்பட்டுள்ள பாதிப்பு பன்மடங்காகும்.

ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் இதர துறைசார் பாதிப்புகளை தற்போதைய சூழ்நிலையில் மதிப்பீடு செய்ய முடியாத தன்மை காணப்படுகின்றது.

‘எக்ஸ் – பிரஸ் பேர்ல்’ கப்பலால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு உரிய நட்டஈடு பெற்றுக்கொள்ள முடியும். அதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன” – என்றார்.