தற்போது நிலவும் சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களால் நாட்டின் பல பாகங்களில் உள்ள பாடசாலை மாணவர்களின் பாடப்புத்தகங்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக அண்மைய காலங்களில் கல்வியமைச்சுக்கு தகவல்கள் கிடைத்துவருவதாக கல்வியமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவித்தார்.
இதனை கருத்திற்கொண்டு, இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு உதவும் பொருட்டு, அவர்கள் தொடர்பான தகவல்களை திரட்டுமாறு கல்வியமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் ஆலோசனை வழங்கியுள்ளார்.
அதற்கமைய, அனர்த்தங்களால் பாடப்புத்தகங்களை இழந்த மாணவர்களுக்கு மீண்டும் புதிய பாடப்புத்தகங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக கல்விமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
எனவே, பாடப்புத்தகங்களை இழந்த மாணவர்களின் பெற்றோர், தமது பிள்ளைகளின் பாடசாலை அதிபரிடம் உறுதிப்படுத்தல் கடிதத்தை பெற்று, அதனை வலயக் கல்வி பணிமனை ஊடாக கல்வியமைச்சுக்கு அனுப்புவதன் மூலம் புதிய பாடப்புத்தகங்களை பெற்றுக்கொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.