கடந்த வாரம் கொழும்பு கடற்பகுதியில் தீப்பற்றி எரிந்த நிலையில் கடலில் மூழ்கடிக்கப்பட்ட எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் ரசாயன கழிவுகள் மன்னார் மாவட்டத்தின் பல கடற்கரையோர பிரதேசங்களிலும் கரையொதுங்கி வருகின்ற நிலையில் இதனை இன்று வியாழக்கிழமை நேரில் பார்வையிட்ட வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் அவர்கள் இவ்வாறு கருத்து தெரிவித்தார்
இன்று மன்னார் மாவட்டத்தில் நானாட்டான் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட வங்காலை கிராமத்து மீனவர்கள் கொழும்பு துறைமுகத்திற்கு அருகாமையில் எரிந்த கப்பலில் இருந்து ரசாயன பொருட்கள் தங்களுடைய கடற்பகுதியில் கரை ஒதுங்குவதாக தெரிவித்து உடனடியாக வந்து பார்வையிட்டு நடவடிக்கை எடுக்குமாறு கேட்டிருந்தார்கள்
நான் இங்கு வந்து பார்வையிட்டபோது கிடைக்கப்பெற்ற ரசாயன கழிவு பொருட்கள் கப்பலின் இருந்து வெளியானவை என்பது உறுதிபடத் தெரிகின்றது
உண்மையில் இந்த விடயம் அரசாங்கத்தினுடைய அசமந்தப் போக்கு காரணமாகவே ஏற்பட்டுள்ளது
இதனால் ஏற்படுகின்ற பின்விளைவுகள் தெரியாமல் இந்த அரசாங்கம் எடுத்த தவறான தீர்மானங்களால் மீனவ சமூகம் மாத்திரமல்ல அனைத்து மக்களும் மிகவும் பாரியதொரு அச்சத்தில் இருக்கிறார்கள்
மன்னாரில் கொக்குப் படையான் முதல் தலைமன்னார் வரைக்கும் இந்த இரசாயன பொருட்கள் கரையொதுங்குவதற்கு வாய்ப்புக்கள் இருக்கின்றது
ஆகவே அரசாங்கம் உடனடியாக இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் மீனவ மக்கள் குறிப்பாக இந்த வீதித் தடை காலத்தில் பிடிக்கின்ற மீன்களை சந்தைப்படுத்த முடியாத நிலை காணப்படுகின்றது அத்துடன் காற்று வேகமாக அடிக்கும் காலமாக இருக்கின்றது இதனை கருத்தில் கொண்டு மக்களுக்கு உடனடியாக மேலதிகமான நிவாரணங்கள் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த விடயம் தொடர்பாக கொழும்பு கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் விஜயசேகர அவர்களுக்கு தெரியப்படுத்தி இருக்கின்றேன்.
இதற்காக கொழும்பில் தனி பிரிவு ஒன்று உருவாக்கப்பட்டு இருப்பதாகவும் அந்த பிரிவிற்கு உடனடியாக தான் தெரியப்படுத்துவதாக அவர் கூறியிருந்தார்.
இந்த அரசாங்கத்தினுடைய ஜனாதிபதி கோட்டபாய அவர்கள் தலைமையிலான கொள்கை வருகின்ற தூரநோக்கற்ற சிந்தனை காரணமாக இன்று இலங்கையில் சிங்களம் முஸ்லிம் என்று அனைத்து மக்களும் எல்லாவிதத்திலும் மோசமாக பாதிக்கப்பட்டு இருக்கின்றர்கள் என்று வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் அவர்கள் தெரிவித்தார்.