முடக்கமா? தளர்வா? – இன்று முடிவு என்கிறார் இராணுவத் தளபதி

இலங்கை முழுவதும் தற்போது நடைமுறையில் உள்ள பயணக் கட்டுப்பாட்டை எதிர்வரும் 21ஆம் திகதி தளர்த்துவதா? இல்லையா? என்பது குறித்து ஜனாதிபதி தலைமையில் இன்று நடைபெறவுள்ள கொரோனாத் தடுப்புச் செயலணிக் கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் என இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா ஊடகங்களிடம் தெரிவித்தார்.

கடந்த மே 21 ஆம் திகதி நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்ட பயணக் கட்டுப்பாட்டை யூன் 21ஆம் திகதி அதிகாலை 4 மணியுடன் தளர்த்துவதற்குக் கடந்த வாரத்தில் முடிவெடுக்கப்பட்டது.

இந்நிலையில், இந்திய திரிபு வைரஸுடன் சமூகத்தில் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளமை, கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் பயணக் கட்டுப்பாட்டை இப்போதைக்குத் தளர்த்த வேண்டாம் என்று விசேட மருத்துவ நிபுணர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எனினும், இது குறித்து இதுவரையில் முடிவெடுக்கவில்லை என்றும், நாட்டின் கொவிட் தொற்றுப் பரவல் நிலைமை குறித்து மீளாய்வு செய்த பின்னரே முடிவெடுக்கப்படும் என்றும், இதன்படி இன்று கூடும் கொரோனாத் தடுப்புச் செயலணிக் கூட்டத்தில் ஆராய்ந்து முடிவெடுக்கப்படும் என்றும் இராணுவத் தளபதி தெரிவித்தார்.