அரசுக்குள் இருப்பதால் கிடைக்கப்போவது ஒன்றுமில்லை! – சுதந்திரக்கட்சி

download 1 88
download 1 88

“தொடர்ச்சியான நிராகரிப்புகளுக்கு மத்தியில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான அரசுக்குள் அங்கம் வகிப்பதால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குக்  கிடைக்கப் போவது ஒன்றும் இல்லை. அரசுக்கு எதிரான மக்கள் அலையொன்று உருவாகிக் கொண்டுள்ள நிலையில், மக்களின் பக்கமே நாம் நிற்க வேண்டும்.”

– இவ்வாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆலோசகரும் அக்கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளருமான பேராசிரியர் ரோஹண லக்ஸ்மன் பியதாஸ தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போதும் பொதுத் தேர்தலின் போதும் எமக்கு கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் இன்று மீறப்பட்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை அரசுக்குள் ஓரங்கட்டும் நிலைமையே ஏற்பட்டுள்ளது.

ஜனாதிபதியும் பிரதமரும் எம்மை ஏமாற்றியுள்ளனர். அவ்வாறான நிலையில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியினரின் தவறான கருத்துக்கள், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு எதிரான பிரசாரங்கள், அரசுக்குள் எம்மை நடத்தும் விதம் குறித்து இப்போது ஜனாதிபதியுடன் பேச்சு நடத்துவதில் எந்த அர்த்தமும் இல்லை என்பதே எமது நிலைப்பாடு.

இந்த நிலைப்பாட்டில் கட்சியில் பலர் உள்ளனர். இறுதியாக ஜனாதிபதியுடன் பேச்சுக்குச் சென்றவர்களில் ஒரு சிலரும் இதே நிலைப்பாட்டை ஆரம்பத்தில் கொண்டிருந்தனர்.

அரசுக்குள் எமது இருப்பைத் தக்க வைத்துக்கொள்வதை விடவும், மக்களிடம் எமது கட்சியைக் கொண்டு சேர்க்க வேண்டும். மீண்டும் தனிக் கட்சியாக நாம் பயணிக்க வேண்டும் என்பதே நாம் இப்போது முன்னெடுக்க வேண்டிய வேலைத்திட்டமாகும்.

இது குறித்து இப்போது தீர்மானம் எடுத்தால் எம்மால் அடுத்த தேர்தல்களில் பலமான கட்சியாக உருவாக முடியும். பழைய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்காரர்களை ஒன்றிணைக்கவும் முடியும்” – என்றார்.