நாட்டில் கொரோனா பரவல்; அரசுக்கோ அதிகார மோகம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் சாடல்

Sajith.Premadasa.7 1
Sajith.Premadasa.7 1

நாடு கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அரசு அதிகார மோகம், மாயை, ஆணவம் மற்றும் பொறுப்பற்ற தன்மை போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளது.

என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், நாட்டு மக்களே இதனால் பாதிக்கப்படுகின்றனர் என்றும் அவர் நேற்று விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் சூழ்நிலையில், பொறுப்பு வாய்ந்த அமைச்சர் ஒருவர், எதிர்காலத்தை கடவுளிடம் ஒப்படைப்பதாகத்  தெரிவித்துள்ளார் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆரம்பம் முதலே அரசு இந்தக் கொரோனாத் தொற்றை தமது சொந்த அரசியல் திட்டமாக மாற்றியதாகக் குறிப்பிட்டுள்ள எதிர்க்கட்சி தலைவர், அரசு கொரோனாவைத் தோற்கடித்ததாக பெருமையுடன் எவ்வாறு தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டது என்பதை மக்கள் நினைவில் கொண்டிருப்பர் எனவும் கூறியுள்ளார்.

அந்த அறிக்கையில் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:-

கொரோனாத் தடுப்பூசியை முற்கூட்டியே பதிவு செய்யுமாறு நாடாளுமன்றத்திலும் அதற்கு வௌியேயும் அரசைப் பல தடவைகள் கேட்டுக்கொண்டோம்.

இராஜதந்திர மட்டத்தில் பல்வேறு இராஜதந்திரிகளைச் சந்தித்து இலங்கைக்குத் தேவையான தடுப்பூசியை வழங்குவதற்கு வேண்டிய உதவிகளை வழங்குமாறு நாம் கோரினோம்.

எனினும், அரசு அவையனைத்தையும் நிராகரித்து அதற்குப் பதிலாக தம்மிக்க பாணியை ஊக்குவித்தது.

அந்தப் பாணியை நாடாளுமன்றத்துக்கும் அரசு கொண்டுவந்தது.நாடாளுமன்றத்தின் சில அமைச்சர்கள் பாணிக்கான பிரசார முகவர்களாக மாறினார்கள்.

சில அமைச்சர்கள் ஆறுகளில் முட்டிகளை இட்டு பிரபல்யமாக்கியதுடன், மூட நம்பிக்கைகளை சமூகமயப்படுத்தினார்கள்.

தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய அரசு நடவடிக்கை எடுத்தபோது, தொற்று சமூக பரவலாகி விட்டது.

தடுப்பூசியை சரியான நேரத்தில் பெற்றுக்கொள்வது, நிதி ஒதுக்கல், மனித வளங்களை பயிற்றுவித்தல், தடுப்பூசிகளை விநியோகித்தல், திட்டமிடுதல் மற்றும் முன்னுரிமையளிப்பது தொடர்பான தௌிவான திட்டத்தை நாம் எப்போதும் முன்வைத்த போதிலும் அரசிடம் அத்தகைய திட்டம் இருக்கவில்லை.

கனடா போன்ற நாடுகள் ஒரு குடிமனுக்கு பல தடுப்பூசிகளை ஒதுக்கியுள்ள போதிலும், இன்னும் அந்த நாடுகளில் அவை மேலதிகமாகக் காணப்படுகின்றது.

எனினும், எமது நாட்டில் இதுவரை ஒரு தடுப்பூசியைக் கூட பெற்றுக்கொள்ளாதவர்கள் உள்ளனர். நாம்  முற்கூட்டியே கூறிய அனைத்தும் நிறைவேறியுள்ளது.

கொரோனாத் தொற்றால் உயிரிழந்தோரில் 80 வீதத்துக்கும் மேற்பட்டோர், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள்.

சுகாதார வழிகாட்டல்களின் அடிப்படையில் இந்தப் பிரிவினருக்குத் தடுப்பூசிக்கான முன்னுரிமையளிக்க வேண்டியிருந்தது.

ஆரம்பம் முதலே தடுப்பூசி ஏற்றும் செயற்பாட்டில் அரசு அரசியலைப் பிணைத்துக் கொண்டது.

தடுப்பூசி ஏற்றல் தொடர்பில் அரசு முன்வைக்கும் அறிக்கைகள் முரண்பாடாக உள்ளன.

கொரோனாத் தொற்றை தோற்கடித்த அனைத்து நாடுகளும் தடுப்பூசியின் மூலமே அதனை மேற்கொண்டுள்ளன.

ஒவ்வொரு நாடும் இந்தப் பணியை சுகாதார நிபுணர்களிடமே ஒப்படைத்த போதிலும், இலங்கையில் அத்தகைய நிபுணர்களை ஒதுக்கிவிட்டு அரசின் விருப்பத்துக்கேற்ப தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

வைத்தியர் மலித் பீரிஸ், வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம, வைத்தியர் அனில் ஜாசிங்க, வைத்தியர் ரவி ரணன்எலிய உள்ளிட்ட நிபுணர்களின் ஆலோசனைகளை அரசு புறக்கணித்ததுடன் குறைந்தபட்சம், நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்திய வைரஸ் தொடர்பான பேராசிரியர் திஸ்ஸ விதாரணவின் ஆலோசனையையேனும் ஏற்கவில்லை- என்றுள்ளது.