காணாமல்போனோரில் பலர் வெளிநாட்டில் வசிக்கின்றனர் -தினேஷ்குணவர்தன

thinesh
thinesh

இலங்கையில் போரின்போது காணாமல்போனதாக கூறப்படுவோரில் பலர் வேறு பெயர்களில் வெளிநாடுகளில் வசிக்கின்றனர் எனது தகவல்கள் கிடைத்துள்ளன.

-என்று வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

இறுதிக்கட்ட போரின்போது அவர்கள் முறையற்ற வழிகளின் ஊடாக நாட்டைவிட்டு வெளியேறியுள்ளனர் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-

காணாமல்போனதாகக் கூறப்படும் நூற்றுக்கணக்கான நபர்கள் வெளிநாடுகளில் வாழ்ந்து வருவதை நிரூபிக்கத்  எம்மிடம் அறிக்கைகள் உள்ளன.

அகதிகள் மற்றும் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு அடைக்கலம் கொடுக்கும் நாடுகளிடம் இருந்து நாம் தகவல்களைக் கோரியுள்ளோம். எனினும், சில நாடுகள் அந்தத் தகவல்களை வழங்க மறுத்துள்ளன.

இலங்கையுடன் போருடன் தொடர்புடைய பரஸ்பர ஒப்பந்தங்களில் கையெழுத்திட்ட நாடுகள் மட்டுமே அந்த விவரங்களை சட்டபூர்வமாக வழங்க முடியும்.

காணாமல்போனவர்கள் தொடர்பில் சர்வதேச அரங்கில் தொடர்ந்தும் கேள்வி எழுப்பப்பட்டு வருகின்றது. ஆனால், காணாமல் போனவர்கள் இப்போது அவ்வாறு கேள்வி எழுப்பும் அமைப்புகளுடன் தொடர்புடைய நாடுகளிலேயே வாழ்கின்றனர்.

எங்களுக்கு எதிரான இந்தக் குற்றச்சாட்டுகள் உண்மை இல்லை என்பதை சர்வதேச அமைப்புகளை நம்ப வைக்க முடியும் என்று நாங்கள் நம்புகின்றோம்.

எவ்வாறாயினும் காணாமல்போனவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீட்டுச் சான்றிதழ்களை வழங்க அரசு ஏற்கனவே முன்வந்துள்ளது. ஆனால், உறவினர்கள் அதனை மறுத்துள்ளனர்.

அத்தோடு தமது உறவுகள் எங்கே, அவர்கள் இறந்துவிட்டார்களா? அல்லது உயிருடன் இருக்கிறார்களா? என்று விசாரிக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

காணாமல்போனவர்களைக் கண்டுபிடிப்பது சாத்தியமில்லை. அதேவேளை, அவர்கள் இறந்துவிட்டார்கள் என்று அரசு கருதவும் முடியாது. எனவே, அவர்களின் நெருங்கிய உறவினர்களுக்கு இறப்புச் சான்றிதழ்களைக் கொடுக்க முடியாது.

1988ஆம் ஆண்டில் காணாமல்போன நபர்கள் சிலர், சமீப ஆண்டுகளில் வீடு திரும்பினர் எனக் கூறப்படுகின்றது. நாங்கள் அவர்களின் இறப்புச் சான்றிதழ்களை வழங்கியிருந்தால் என்ன நடந்திருக்கும்?” என்றும் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன கேள்வி எழுப்பியுள்ளார்.