கொழும்பு துறைமுகத்தின் மேற்குமுனையத்தின் முழு அதிகாரத்தையும் வெளிநாட்டு நிறுவனம் ஒன்றுக்கு வழங்கி இருப்பது மிகவும் ஆபத்தானது என ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.
கொழும்பில் இன்று காலை இடம்பெற்ற சமய நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
ஒருநாட்டின் துறைமுகங்கள் என்பது அந்த நாட்டின் பிரதான வருமானம் ஈட்டும் இடமாகும். எந்த நாடும் தங்கள் துறைமுகங்களை வெளிநாடுகளுக்கு வழங்குவதில்லை. என்றாலும் துறைமுக அபிவிருத்தியை வெளிநாடுகளின் முதலீடுகள் உதவியுடனே மேற்கொள்ளவேண்டி இருக்கின்றது என்பதை நாங்கள் ஏற்றுக் கொள்கின்றோம்.
ஆனால் 51வீத பங்கை வழங்கியதுதான் தவறு. அதனால் துறைமுகத்தின் வருமானத்தில் 15வீதமே துறைமுக அதிகாரசபைக்கு கிடைக்கின்றது. ஏனைய 85வீதம் இந்திய அதானி நிறுவனத்துக்கே செல்கின்றது. இது மிகப்பெரிய அநியாயமாகும் என்றும் அவர் இதன்போது கூறினார்.