நியாயமான விமர்சனங்களை ஏற்றுக்கொள்ள அரசாங்கம் தயார் – ஜனாதிபதி

kotta 1

அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து பொதுமக்களிடமோ அல்லது ஊடகங்களிடமோ மறைக்க எதுவும் இல்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் (27) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் குறைப்பாடுகளை விமர்சிக்க அனைவருக்கும் உரிமை இருப்பதாகவும், அவ்வாறான நியாயமான விமர்சனங்களை ஏற்றுக் கொள்ள அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

தம்மை ஜனாதிபதியாக தெரிவு செய்த மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதே தமது ஒரே நோக்கமாக இருப்பதாக தெரிவித்த ஜனாதிபதி, அதன்போது ஏற்படும் குறைபாடுகளை சுட்டிக்காட்டுவதற்கு மக்களுக்கு உரிமை உள்ளது என்பதை வலியுறுத்தியுள்ளார்.

தான் ஆட்சிக்கு வரும் போது எதிர்பாராத விதமாக கொவிட் பரவல் ஆரம்பமானதுடன், அதனால் தான் எதிர்பார்த்த இலக்குகளை அடைய முடியாமல் போனதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

செல்வந்த நாடுகளில் இருந்த பொருளாதார பலம் காரணமாகவே அவை கொவிட் பரவலை முறையாக எதிர்கொண்டதாக அவர் கூறினார். 

அத்துடன், தமக்கு யாருடனும் போட்டி இல்லை எனவும், நாட்டைக் கட்டியெழுப்புவதே தனது ஒரே குறிக்கோள் என்றும் குறிப்பிட்ட ஜனாதிபதி, சிலரிடமிருந்து அதற்கு தேவையான ஆதரவு கிடைக்கவில்லையென தெரிவித்தார்.

கூட்டாகச் செயற்படும் கலையை தான் நன்கு அறிந்தவர் என்பதை வலியுறுத்திய ஜனாதிபதி, ஒன்றிணைந்து போராடுவதன் மூலம் ஜனநாயகக் கட்டமைப்பிற்குத் தேவையான ஒற்றுமையைக் கட்டியெழுப்ப முடியும் என்றார்.