இலங்கை, இந்திய யூனியன் பிரதேசம் இல்லை – உதய கம்மன்பில தமிழ் கட்சிகளுக்குப் பதில்

uthayan
uthayan

13 ஆம் திருத்தச் சட்டத்தின் அமுலாக்கத்தில் ஏதேனும் பிரச்சினைகள் இருப்பின் அதனைத் தமிழ் கட்சிகள் ஜனாதிபதியிடம் முறையிட வேண்டுமே தவிர, இந்தியாவிடம் முறையிடக் கூடாது என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.

வடக்கு கிழக்கில் தமிழ்த் தேசிய பரப்பில் இயங்குகின்ற கட்சிகள் இணைந்து நேற்று இந்தியப் பிரதமருக்கான கடிதம் ஒன்றை, இந்திய உயர்ஸ்தானிகரிடம் கையளித்தன.

இது தொடர்பாக இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த அமைச்சர் உதய கம்மன்பில, இலங்கை இந்திய ஒன்றியத்தின் ஒரு அங்கம் இல்லை என்று சுட்டிக்காட்டினார்.

முதலில் இந்த கேள்விக்குப் பதில் வழங்கிய அமைச்சர் ரமேஸ்பத்திரன, 13ம் திருத்தச் சட்டம் இலங்கையில் அமுலாக்கப்பட்டிருப்பதாகவும், அதில் சிக்கல் எதுவும் இல்லை என்றும் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து கருத்து தெரிவித்த அமைச்சர் உதய கம்மன்பில, இலங்கை இறைமை உள்ள நாடு என்ற அடிப்படையில், 13ம் திருத்தச் சட்ட அமுலாக்கத்தில் ஏதேனும் பிரச்சினைகள் இருக்குமாக இருந்தால் தமிழ் சகோதரர்கள் ஜனாதிபதியிடமே முறையிட்டிருக்க வேண்டும் என்றார்.

மாறாக இந்தியாவிடம் அதனைக் கொண்டு செல்லக்கூடாது என்றும் கூறினார்.