யாழ். மாநகர சபைக்கு வழங்கிய நிதியை மீள கோரும் ஜப்பான்

image 0d14d734fa
image 0d14d734fa

தம்மால் முன்மொழியப்பட்ட சீரமைக்கப்பட்ட நான்கு கழிவு சேகரிப்பு மீள்சுழற்சி பாரவூர்தி உடன்படிக்கையை நடைமுறைப்படுத்தாதன் காரணமாக, அதற்காக ஒதுக்கப்பட்ட பணத்தை மீள ஒப்படைக்குமாறு ஜப்பானிய தூதரகம் யாழ்ப்பாண மாநகர சபையிடம் கோரியுள்ளது.

2019 ஆம் ஆண்டு ஏப்ரலில் ஜப்பானிய வெளியுறவு அமைச்சகத்தின் இலாப நோக்கற்ற பிரிவான, ஜப்பானிய இராஜதந்திரத்தை மேம்படுத்துவதற்கான சங்கம் (SPJD), ஜப்பானிய உள்ளூராட்சி மன்றங்களால் நன்கொடையாக வழங்கப்பட்ட நான்கு கழிவு சேகரிப்பு மீள்சுழற்சி வாகனங்களை வழங்குவதற்காக, யாழ் மாநகர சபையுடன் ஒப்பந்தமொன்றை கைச்சாத்திட்டது.

அதன்படி, நான்கு வாகனங்களை கொள்வனவு செய்தல்,  இறக்குதல், சுங்க அனுமதி மற்றும் உள்நாட்டுப் போக்குவரத்து தொடர்பான செலவுகளுக்கான மொத்தத் தொகையாக ஒரு கோடியே 43 இலட்சத்து 29,446 ரூபா நிதி ஜப்பானினால் வழங்கப்பட்டதுடன், இந்த நிதி நேரடியாக யாழ் மாநகர சபையின் கணக்கில் வரவு வைக்கப்பட்டது.

இந்த உடன்படிக்கையில், வாகனங்களின் பயனுள்ள பயன்பாடு மற்றும் சுய பராமரிப்பு குறித்து உள்ளூர் ஊழியர்களுக்கு பயிற்சி அளிப்பதுடன், தேவையான மறுசீரமைப்பு மற்றும் பரிசோதனையின் பின்னர் வாகனங்களை ஹம்பாந்தோட்டைக்கு கொண்டு செல்லல் என்பன ஜப்பானிய தரப்பினால் ஒப்புக் கொள்ளப்பட்டது.

அத்துடன், பயன்படுத்திய வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு தேவையான அனுமதிகளை யாழ் மாநகரசபை முன்கூட்டியே பெறும் என்று ஒப்புக்கொள்ளப்பட்டது.

எவ்வாறாயினும், திட்டத்தை 3 ஆண்டுகளாக நடைமுறைப்படுத்தா காரணத்தினால், பாரவூர்தி சார்ந்த செலவுகளுக்காக வழங்கிய நிதியை ஜப்பான் கோரியுள்ளதாக யாழ் மாநகர சபைக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில், செய்திப்பிரிவு,ஒன்று யாழ் மாநகர சபை உறுப்பினர் வரதராசா பார்தீபனை தொடர்புகொண்டு வினவியபோது, கடந்த 2019 ஆம் ஆண்டு ஜப்பான் அரசாங்கத்தினால், ஜப்பானிலுள்ள இலங்கை தூதரகத்திடம் கையளிக்கப்பட்ட நான்கு கழிவகற்றல் பாரவூர்திகளை இறக்குமதி செய்வததற்காக கொடுக்கப்பட்ட ரூ .14.3 மில்லியன்  பணத்தை திருப்பித் தருமாறு ஜப்பானிய தூதரகம், யாழ் மாநகர சபைக்கு கடிதம் அனுப்பியுள்ளது.

இறக்குமதி செலவுகளுக்காக, யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு ஜப்பான் வழங்கிய நிதியை பயன்படுத்துவதற்கு இலங்கை நிதியமைச்சு தடை விதித்ததாலேயே, இந்த உடன்படிக்கையை நடைமுறைப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டது.

வெளிநாட்டிலிருந்து கிடைத்த நிதியை, உள்ளூராட்சி மன்றங்களால் நேரடியாக பயன்படுத்த முடியாது என்ற காரணத்தை குறிப்பிட்டு இந்த நிதியை பயன்படுத்துவதை நிதியமைச்சு தடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

எனினும், ஜப்பான் அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமைய, குறித்த நிதியை மீள ஒப்படைப்பதற்கு யாழ் மாநகர சபை ஒப்புக்கொண்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், இலங்கை அரசாங்கம் வெளிநாட்டு கடனைத் திருப்பிச் செலுத்துவதை பிற்போடுவதாக ஏப்ரலில் அறிவித்ததை அடுத்து,  ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகவரகத்தின் (JICA) திட்டங்கள் ரத்து செய்யப்பட்டன.

இதனால் யாழ் மாநகர சபையுடனான அண்மைய திட்டங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைக்கமைய, இலங்கையின் கடன் நிலைத்தன்மை குறித்த வியூகத்தை உருவாக்கும் வரையில் சில அபிவிருத்தி திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக அண்மையில் நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.