தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் இன்று முற்பகல் 11 மணியளவில், நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம்பெறவுள்ளது.
இதன்போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் பதவி நிலைகள் தொடர்பில் ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுத் தேர்தலின் பின்னர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளிடையே கருத்து முரண்பாட்டு நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
குறிப்பாக தேசியப் பட்டியல்உறுப்பினர் நியமனம் தொடர்பில், இலங்கை தமிழரசுக் கட்சி தன்னிச்சையான தீர்மானம் மேற்கொண்டதாக ஏனைய பங்காளிக் கட்சிகளான டெலோ மற்றும் புளொட் என்பன அதிருப்தி வெளியிட்டிருந்தன.
இதேநேரம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பதவி நிலைகளில் மாற்றங்கள் ஏற்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
இந்த நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர், நாடாளுமன்று குழுவின் அமைப்பாளர் உள்ளிட்ட சில பதவி நிலைகள் தொடர்பில் இன்று இடம்பெறவுள்ள நாடாளுமன்ற குழுக் கூட்டத்தில் ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது, அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டமூல வரைவு உட்பட சமகால அரசியல் நிலவரங்கள் தொடர்பிலும் ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.