தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன், இலங்கைக்கான கனேடியத் தூதுவர் டேவிட் மெக்கின்னனிடம் மூன்று முக்கிய கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்.
மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியிலுள்ள இரா.சாணக்கியன் எம்.பியின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற சந்திப்பின்போதே இந்தக் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானம் தொடர்பான சர்வதேசப் பார்வையை மேலும் வலுப்படுத்த வேண்டும், இலங்கை அரசின் புதிய அரசமைப்பில் தமிழர்களின் பிரச்சினைகளைக் கருத்தில்கொண்டு அவற்றுக்கான தீர்வுகள் உள்வாங்கப்படுவதற்காக சர்வேதேச ரீதியிலான அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட வேண்டும் மற்றும் தமிழர் பிரதேசங்களில் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பெண் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கான வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை சாணக்கியன் எம்.பி. முன்வைத்துள்ளார்.
அத்துடன், பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பெண் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கான வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல் மற்றும் அவர்களுக்கான ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்வதற்கான திட்ட ஆவணங்களை இந்தச் சந்திப்பின்போது கனேடியத் தூதுவரிடம் சாணக்கியன் எம்.பி. கையளித்தார்.