தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தன்னுடைய துப்பாக்கியால் செய்துக் கொள்ள முடியாததை, அரசியலமைப்பின் 20வது திருத்த சட்டத்தின் ஊடாகப் பெற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பம் கிட்டும் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார் .
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
அரசியலமைப்பின் 20வது திருத்த சட்டமூலம் ஆபத்தானது. “அரசியலமைப்பின் 20ஆவது திருத்த சட்ட மூலம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர், இரட்டை குடியுரிமையைக் கொண்டவர்கள் எவ்விதமான பிரச்சினைகளும் இன்றி இந்நாட்டின் நாடாளுமன்றத்தில் பிரதிநிதியாவதற்கு சந்தர்ப்பம் கிடைக்கும்.
இதன் ஊடாக, புலம்பெயர்ந்திருக்கும் தமிழ் புலிகள் உட்பட, இரட்டை குடியுரிமையைக் கொண்ட எந்தவொரு நபர்களும் நாடாளுமன்றத்துக்குள் நுழைந்து கொள்ள முடியும்“ என்று குறிப்பிட்டுள்ளார்.
யாராவது ஒருவர் முன்னைய பயணத்தை தொடர்வதற்கு தயாராக இருந்தாராயின், அது வரலாற்றில் செய்யும் பாரிய துரோகம் எனவும் , வேலுப்பிள்ளை பிரபாகரனால் பெற்றுக்கொள்ள முடியாததை, 20வது திருத்த சட்டத்தின் ஊடாக பெற்றுக்கொடுப்பதற்கு முயற்சிக்கின்றனர் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது .