பிரபாகரனின் இறப்பு செய்தியை கேட்டு உணவு கூட உண்ண முடியாதிருந்தேன்: பிள்ளையான்!

pillaiyan 1
pillaiyan 1

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் யுத்தத்தின் இறுதியில் இறந்தது பற்றிய செய்தியை கேட்டதும் மிக வேதனையாக இருந்தது என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் பிள்ளையான் தெரிவித்துள்ளார் .

ஊடகமொன்றிற்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,

தலைவர் மறைந்த செய்தியை கேட்டதும் மிகவும் கவலையாக உணர்ந்தேன். மதியம், இரவில் உணவருந்தக்கூட முடியாதளவு வேதனையாக இருந்தது.

இது ஒரு இயல்பான விடயம். என்ன தான் எதிரியாக இருந்தாலும் அவர்களது இறப்பில் கவலை கொள்வது சாதாரண விடயம் தான் . அது இயல்பானது. என்று கூறியுள்ளார் .

மேலும், புலிகள் அமைப்பிலிருந்து கருணா விலகுவதாக அறிவிப்பதற்கு சில நாட்களின் முன்னர் என்னை அழைத்து “பிள்ளையான் இருப்படியொரு முடிவெடுக்க வேண்டி வரும் போல இருக்கிறது நாங்கள் தனியாக இயங்குவது பற்றி யோசிக்கலாம்“ என கூறியதாகவும் அதற்கு நான் “நீங்கள் முடிவெடுத்தால் நான் அதற்கு உடன்படுகிறேன். ஆனால் அந்த முடிவு ஊடகங்களில் பெரிதாக்கப்பட்டு, நிரந்தரமாக பிரிய வேண்டிய சூழல் ஏற்பட்டால் எல்லாமே முடிந்து போய்விடும். எனவே கவனமாக முடிவெடுங்கள்“ என்று அவருக்கு பதிலளித்தேன் என்றும் தெரிவித்துள்ளார் .

இதேவேளை , அதன் பின்னர் சில தினங்களில் இயக்கத்தில் இருந்து கருணா பிரிந்து விட்டார் என்று ஊடகங்களில் வெளியான செய்தியை பார்த்தவுடன் மிகவும் வேதனையடைந்தேன் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது