தமிழர் நினைவுகூரல் மீதான தடை ஒரு படுகுழியாகும்: பேர்ள் அமைப்பு வன்மையாகக் கண்டிக்கிறது!

e1608135 ac8e 41db a16e b2fa8b4a0a81
e1608135 ac8e 41db a16e b2fa8b4a0a81

வோஷிங்டன் டி.சி செப்தெம்பர் 24, 2020 — 1987 ஆம் ஆண்டு தமிழர் உரிமைகளுக்காக உண்ணாவிரதமிருந்து உயிர் நீத்த லெப். கேணல் திலீபனை நினைவுகூர்வதற்கு இலங்கை நீதிமன்றம் ஒன்று தடைவிதித்திருப்பதாக வரும் செய்திகள் கவலையளிப்பதாகவுள்ளன.

நினைவேந்தற் செயற்பாடுகளை ஏற்பாடு செய்தவர்கள் தடையின் காரணமாகக் கைது செய்யப்பட்டமையை பேர்ள் வன்மையாகக் கண்டிக்கிறது. மேலும், இத்தடைக்கு எதிராகத் திட்டமிடப்பட்டுள்ள எதிர்ப்புச் செயற்பாடுகளுடன் பேர்ள் ஒருமைப்பாட்டை வெளிப்படுத்த விழைகிறது.

இது தமிழர் போராட்டத்தின் முக்கிய தினங்கள் தமிழ் மக்களால் நினைவுகூரப்படுவதைத் தடுப்பதற்கு அரசு தொடர்ச்சியாக எடுத்துவரும் முயற்சிகளின் ஒரு அச்சமூட்டும் விரிவாக்கமாகும்.
யுத்தத்திற்குப் பிந்தைய காலப்பகுதியில் போராட்டத்தை நினைவுகூர்வதற்கு முயற்சிக்கும் தமிழர்களைப் பாதுகாப்புப் படையினர் தொடர்ச்சியாகக் கண்காணித்தும், துன்புறுத்தியும் வந்திருந்தபோதிலும், அதற்காகச் சட்டச் செயன்முறையை முறைகேடாகப் பயன்படுத்துவது எச்சரிக்கையளிப்பதாகவுள்ளது.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ம.க. சிவாஜிலிங்கம் கடந்த வாரம் கைது செய்யப்பட்டதைப் பேர்ள் வன்மையாகக் கண்டிப்பதோடு, அரசின் இச்செயற்பாடுகளைக் கண்டிப்பதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் கூட்டணி உள்ளிட்ட தமிழ்த் தேசியக் கட்சிகள் காட்டிய ஒற்றுமைக்குத் தனது ஆதரவையும் தெரிவிக்கிறது.

கடந்த காலத்தில், தமிழர் போராட்டத்துடன் தொடர்புடைய நினைவேந்தல் நிகழ்வுகளை ஏற்பாடு செய்தவர்களையும், அதிற் கலந்துகொண்டவர்களையும் பாதுகாப்புப் படையினர் கண்காணித்தும், துன்புறுத்தியும் வந்துள்ளதைப் பேர்ள் தனது 2016 ஆம் ஆண்டின் ‘கடந்த காலத்தை துடைத்தழித்தல்: வடக்கு மற்றும் கிழக்கு இலங்கையில் நினைவுகூரல் மீதான அடக்குமுறை’ எனும் அறிக்கையில் ஆவணப்படுத்தியுள்ளது.

எனினும், ஒரு மீ தேசியவாத, சிங்கள பௌத்த மேலாதிக்க அரசும், தமிழர் அரசியல் மீது அக்கறை கொள்ளாத சனாதிபதியும், பாராளுமன்றமும் சேர்ந்த தற்போதைய காலநிலை இன்னும் ஆபத்தானது.

இவ்வாறு சட்டச் செயன்முறையை முறைகேடாகப் பயன்படுத்துவது, தமிழர் தாயகத்திலும், புலம்பெயர் நாடுகளிலுமுள்ள பல்லாயிரக்கணக்கான தமிழர்களால் ஆண்டுதோறும், நவம்பர் 27 ஆம் திகதி நினைவுகூரப்படும் மாவீரர் நாள் மற்றும் மே 18 ஆம் திகதி நினைவுகூரப்படும் தமிழின அழிப்பு நினைவு நாள் போன்ற நினைவேந்தல் நாட்கள் தொடர்பில் மேலதிக தடைகளுக்கும், கைதுகளுக்கும், அச்சுறுத்தல்களுக்கும் தளமமைத்துக் கொடுக்கும்.

இது பல்லாண்டுகளாகத் தமிழர்கள் போராடிப் பெற்ற அரசியல் வெளியை மேலும் சுருங்கச்செய்வதோடு, இலங்கையில் அர்த்தமுள்ள பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பில் சிலர் கொண்டிருக்கும் சிறிய நம்பிக்கையையும் சிதைப்பதாக அமையும்.

தடைகளேதுமற்ற நினைவுகூரலானது, சுதந்திரமான பேச்சு மற்றும் கருத்து வெளிப்பாட்டுடன் பிரிக்கமுடியாதவாறு இணைந்துள்ளதுடன், தமிழ் மக்களின் அடிப்படைக் கோரிக்கைகளில் ஒன்றாகவும் இருந்துவருகிறது.

நினைவுகூரல் மீதான அரச அடக்குமுறையை முடிவுக்குக்கொண்டுவருவது வன்முறையிலிருந்து தப்பிப் பிழைத்த அனைவருக்கும் உதவிசெய்வதாக அமையும் என்பதுடன், அவர்களது காயங்களை ஆற்றும் செயன்முறையை எளிதாக்கும்.

“இன முரண்பாட்டின் நிலையான தீர்விற்கு, அதன் பங்கேற்பாளர்களும், அதனால் பாதிக்கப்பட்டுத் தப்பிப் பிழைத்தவர்களும் சுதந்திரமாக நினைவுகூர்வதற்கு அனுமதிக்கப்படவேண்டும்,” என எமது நிர்வாக இயக்குனர் தாஷா மனோரஞ்சன் கூறினார். “நினைவுகூரல் மீதான அரச கட்டுப்பாடுகளும், ஒருபக்கச்சார்பான விவரணங்கள் தொடர்ச்சியாக வலுக்கட்டாயமாகத் திணிக்கப்படுவதும் நாட்டை மேலும் பிளவுபடுத்துவதாகவே அமையும்,” என அவர் மேலுந் தெரிவித்தார்.

தமிழர் நினைவுகூரல் மீதான தடை ஒரு படுகுழியாகும். அது வேகமாக இலங்கையை மேலும் முரண்பாட்டிற்குள் தள்ளும். தமிழ்ச் சமூகத்தின் நினைவுகூர்வதற்கான உரிமையிற் தலையிடுவது, சுதந்திரமான பேச்சையும், கருத்து வெளிப்பாட்டையும் பாதுகாக்கும் உள்நாட்டு மற்றும் சர்வதேச சட்டங்களின் ஏற்றுக்கொள்ளமுடியாத மீறலாகும் என்ற சந்தேகத்திற்கிடமில்லாச் செய்தியை இலங்கைக்கு அனுப்புமாறு பேர்ள் சர்வதேசச் சமூகத்தை வலியுறுத்துகிறது. இலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெறும் அடக்குமுறைக்கும், வெளிப்படுத்தப்படும் பாரபட்சத்திற்கும், பொதுமக்கள் மீது நிகழ்த்தப்படும் பாரிய அட்டூழியங்களுக்கும் பின்விளைவுகள் இருந்தேயாகவேண்டும்.