தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கஜேந்திரகுமார் அணியின் புதிய தேசிய அமைப்பாளராக மட்டகளப்பு மாவட்ட அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷ் நியமிக்கப்பட்டுள்ளதாக முன்னணியின் கஜேந்திரகுமார் அணி அறிவித்துள்ளது .
இது தொடர்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் அணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இந்த விடயத்தினை தெரிவித்தார்.
முன்னதாக தேசிய அமைப்பாளராக இருந்த விஸ்வலிங்கம் மணிவண்ணன் கட்சியின் ஒழுக்க விதிமுறைகளை மீறியதாக கூறிஅவர் வகித்த பதவிகளில் இருந்து நீக்கப்பட்டதாக முன்னணியின் கஜேந்திரகுமார் அணி தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் முன்னணியின் கஜேந்திரகுமார் அணியின் தேசிய அமைப்பாளராக தற்பொழுது மட்டகளப்பு மாவட்ட அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷ் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
அத்துடன் முன்னணியின் கஜேந்திரகுமார் அணியின் உப செயலாளராக திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் இரா.சிறீஞானேஸ்வரன்( கண்ணன்)அவர்களும் நியமிக்கப்பட்டுள்ளதாக கஜேந்திரகுமார் அணியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் ஜெகதீஸ்வரன் எமது செய்திப்பிரிவிடம் தெரிவித்தார் .
இதேவேளை குறித்த விடயம் தொடர்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மணிவண்ணன் பிரிவின் உறுப்பினர் ஒருவரிடம் எமது செய்திப்பிரிவு தொடர்பு கொண்டு வினவிய போது தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளராக மணிவண்ணனே செயற்பட உள்ளதாக தெரிவித்த அவர் தமிழ் தேசிய மக்கள் முன்னணியை பலப்படுத்தும் அரசியல் நகர்வுகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.,