சாணக்கியன்,சரவணபவன் உள்ளிட்ட 6 பேரை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன் உட்பட ஆறு பேரை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய அவர்களை எதிர்வரும் 02ஆம் திகதி காலை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு மட்டக்களப்பு நீதிமன்றம் ஊடாக அழைப்பாணை அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் வழங்கிய முறைப்பாடுகளின் அடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், சீ.யோகேஸ்வரன், பா.அரியநேத்திரன் மற்றும் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உபதலைவர் நா.சங்கரப்பிள்ளை ஆகியோருக்கு இவ்வாறு அழைப்பாணை அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

தியாக தீபம் திலீபனை நினைவு கூருமுகமாக இலங்கை தமிழரசுக் கட்சியின் சார்பில் அல்லது அவர்களினால் நியமிக்கப்பட்ட நபர்களினால் விளக்கு ஏற்றும் நிகழ்வினை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொண்டமை தொடர்பாக வழங்கப்பட்ட முறைப்பாடுகளின் அடிப்படையிலேயே இந்த அழைப்பாணை வழங்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற பதிவாளரின் ஒப்பந்தத்துடன் இந்த அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.