13 ஐ முழுமையான ஒரு தீர்வாக எந்தவொரு தமிழ்க் கட்சியும் ஏற்றுக்கொள்ளவில்லை- சுரேஸ் பிரேமசந்திரன்

prmakjhgjk87654689 1
prmakjhgjk87654689 1

13 ஐ முழுமையான ஒரு தீர்வாக எந்தவொரு தமிழ்க் கட்சியும் ஏற்றுக்கொள்ளவில்லை என ஈழமக்கள் புரட்சிகாரா விடுதலைமுன்னணியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரரும், தமிழ் மக்கள் தேசியக்கூட்டணியின் இணைப் பேச்சாளருமான சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தம் குறித்து தற்போது இடம்பெறும் சர்ச்சை மற்றும், தமிழ்க் கட்சிகளிடையேயான இணக்கப்பாடு ,எதிர்கால வேலைத் திட்டம் என்பன தொடர்பில் கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதனை ஒரு ஆரம்பமாக ஏற்றுக்கொண்டாலும், 13 ற்கும் மேலாகச் சென்று தீர்வைத் தர வேண்டும் என்பதுதான் தமிழ்க் கட்சிகளின் நிலைப்பாடு. அதனைத்தான் அவை வலியுறுத்தி வந்திருக்கின்றன.

ஆனால், இப்போது 13 ஐ இல்லாமலாக்க வேண்டும் என முன்வைக்கப்படும் கருத்துக்கள் ஒரு புதிய சூழ்நிலையை ஏற்படுத்தியிருக்கின்றது. 13 ஐ பாதுகாக்க வேண்டும் என்ற குரல்கள் தமிழர் தரப்பிலிருந்து முன்வைக்கப்படுகின்றது. அதாவது, சமஷ்டி போன்றவற்றை மறந்து 13 என்பதற்குள்ளேயே எல்லோரும் வந்திருக்கின்றார்கள். உண்மையில், இது சாண் ஏற முழம் சறுக்கும் நிலைதான். இவ்வாறான ஒரு நிலையை அரசாங்கம் ஏற்படுத்தியிருக்கின்றது.

இந்த நிலையில், தமிழ்க் கட்சிகளின் வகிபாகம் முக்கியமானது. அவை அனைத்தும் ஒன்றிணைந்து வெளிவிவகாரத்தைக் கையாள்வதற்கான குழு ஒன்றை அமைக்க வேண்டும். குறிப்பாக இந்தியாவையும், ஐ.நா. வையும் கையாளக் கூடிய குழு அவசியம். பிரத்தியேகமாக இந்தியாவைக் கையாள்வதற்கான தனியான குழு ஒன்றை அமைப்பது கூட பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில் இந்த நாடுகளைக் கையாள்வது தமிழர்களைப் பொறுத்தவரையில் முக்கியமானது.

அவ்வாறு அனைத்துத் தமிழ்க் கட்சிகளையும் உள்ளடக்கிய குழுவை அமைக்கும் போது இந்தியாவும் அதற்கு மதிப்பளிக்கும். ஏனைய நாடுகளும் – ஐ.நா. மனித உரிமைகள் பேரவை போன்றனவும் அதனை ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கும். இவ்வாறான குழுவுடன் மறுதலிக்க முடியாமல் பேசவேண்டிய நிர்ப்பந்தம் இந்தியாவுக்கும் ஏனைய சர்வதேச தரப்பினருக்கும் ஏற்படும்.

அவ்வாறான குழு முன்வைக்கும் விடயங்களை ஆராய வேண்டிய நிர்ப்பந்தம் அந்த நாடுகளுக்கு ஏற்படும். தனிநபர்கள் இந்த விடயங்களைக் கையாளாமல், அதற்கென அனைத்துத் தமிழ்க் கட்சிகளாலும் உருவாக்கப்படும் குழு இந்த விடயங்களைக் கையாள்வது மிகவும் பயனுள்ளதாகவும்பெறுமதியானதாகவும் இருக்கும்.

தமிழ் மக்களுடைய விடயங்கள் எவ்வாறு கையாளப்பட வேண்டும் என்பதையிட்டு கூட்டாக சில விடயங்களை இதன் மூலம் நாம் முன்வைக்க முடியும். அவ்வான குழு ஒன்றினால் முன்வைக்கக்கூடிய கருத்துக்கள் நிச்சயமாக இராஜதந்திர வட்டாரங்களால் கவனத்திற்கொள்ளப்படும் அதனையிட்டு உடனடியாக ஆராயவேண்டிய தேவை ஒன்றுள்ளது” என்றும்சுரேஷ் பிறேமச்சந்திரன்மேலும் தெரிவித்துள்ளார்.