அரசாங்கம் கூறும் ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ என்ற கொள்கை ஒரு கேலிகூத்தாகவே தெரிகிறது-மனோ கணேசன்

Mano 01
Mano 01

ஆயுதம் ஏந்தியவர்களை தெற்கில் நினைவு கூறும்போது ஏன் வடக்கில் மாத்திரம் நினைவு கூறமுடியாது. இந்த அரசாங்கம் கூறும் ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ என்ற கொள்கை ஒரு கேலிகூத்தாகவே தெரிகிறதென தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான  மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

மனோ கணேசன் தனது ருவிட்டர் பக்கத்திலேயே இவ்வாறு பதிவேற்றியுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, “அரசுக்கு எதிராக ஆயுதம் ஏந்தியவர்களை அரசாங்கம் தனது கணிப்பீட்டின்படி ‘பயங்கரவாதிகள்’ என்கிறது.

அவ்வாறாயின்  1970ஆம் மற்றும்  80ஆம்  ஆண்டுகளில் இலங்கை அரசுக்கும், இராணுவத்துக்கும் எதிராக ஆயுதம் தூக்கிய ஜே.வி.பி.யின் தேசப்பிரேமி இயக்க போராளிகள், ‘சிங்கள பயங்கரவாதிகள்கள்’ ஆவர். இவர்கள் வருடா வருடம் தெற்கில் பகிரங்கமாக நினைவு கூறப்படுகிறார்கள்.

ஆனால் அதே வரப்பிரசாதம், தமிழர்களுக்கு இல்லை. ‘தமிழ் பயங்கரவாதிகளை’ என்ற தமிழ் ஆயுததாரிகளை மட்டுமல்ல, பலவேளைகளில் மரணித்த சாதாரண மக்களையே பகிரங்கமாக நினைவு கூற தமிழர்கள் அனுமதிக்கப்படுவதில்லை.

இது இந்நாட்டில் நீண்ட நாளாக நடந்து வரும் ஒரு இரட்டை நிலைப்பாடு கொண்ட பாரபட்ச கொள்கை ஆகும். இதற்கு இடையில் இன்று இந்த அரசு, மேலும் ஒரு கொள்கையை பற்றி பேசி வருகிறது. அதுதான் ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ என்ற கொள்கை ஆகும். இது இந்நிலைமையை இன்னமும் கேலி கூத்தாக மாற்றி உள்ளது.

அதாவது, மறைந்த தமது உறவுகளை தமிழர் நினைவு கூறுவது மறுக்கபடுவதும், அதே உரிமை சிங்களவருக்கு வழங்கப்படுவதும், இந்நாட்டில் அரசின் இரட்டை கொள்கையின் அடிப்படையில் கேலி கூத்தாக அமைகிறது. மறுபுறம் தமிழ் மக்களை பொறுத்தவரையில் இது பெரும் சோகமாக அமைகிறது.

இந்த இரட்டை கொள்கை உடன் முடிவுக்கு வரவேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.