ரிஷாத்தைக் கைதுசெய்வதற்கான முயற்சி முஸ்லிம்களைச் சீண்டிப் பார்க்கும் செயல்- முன்னாள் எம்.பி. நஸீர்!

எம்.பி. நஸீர்
எம்.பி. நஸீர்

“அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனைக் கைதுசெய்வதற்கு சட்டமா அதிபர் ஊடாக அரசு ஆணை பிறப்பித்துள்ளமையானது முஸ்லிம்களைப் சீண்டிப் பார்க்கும் ஒரு செயற்பாடாகவே நோக்க வேண்டியுள்ளது.”

– இவ்வாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். நஸீர் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

“இலங்கையின் ஆரம்ப வரலாற்றில் இருந்து இன்றை வரைக்கும் இலங்கை முஸ்லிம்கள் இலங்கைத் திருநாட்டுக்குத் தேசப்பற்றுடையவர்களாகவே இருந்து வருகின்றனர்.

ஆளும் கட்சியோ அல்லது எதிர்க்கட்சியோ ஏதோ ஒரு பெரும்பான்மைக் கட்சிக்குத்தான் தங்களது ஆதரவையும் நல்கி வருகின்றனர்.

ஆனால், தற்போதைய அரசானது சிறுபான்மை மக்களுக்குக் குறிப்பாக முஸ்லிம்களுக்கு எதிரான ஒரு போக்கையே கடைப்பிடித்து வருகின்றது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம் மக்கள் தங்களுக்குப் பாரியதொரு ஆதரவைத் தரவில்லை என்ற காரணத்தால் இப்போது அதற்கான பழிவாங்கல் நடவடிக்கைகளைத் தற்போதைய அரசு மேற்கொண்டு வருகின்றது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனைக் கைதுசெய்வதற்கு சட்டமா அதிபர் ஊடாக அரசு ஆணை பிறப்பித்துள்ளமையானது முஸ்லிம்களைப் சீண்டிப் பார்க்கும் ஒரு செயற்பாடாகவே நோக்க வேண்டியுள்ளது. இது ஓர் ஜனநாயக நாடு – ஜனநாயகமான ஓர் அரசு என்றால் இவ்வாறான பழிவாங்கும் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும்” – என்றுள்ளது.