வடமாகாணத்தில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் தொடர்பில் வெளியான விபரம்!

வட மாகாணத்தில் கொரோனா தொற்று ஆரம்பித்த மார்ச் மாதத்தில் இருந்து இன்று வரை 59 கொரோனா நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

வடக்கு மாகாணத்தில் தற்போதைய நிலைமை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்

மார்ச் முதல் செப்ரெம்பர் வரையான காலப்பகுதியில் 18 நோயாளர்களும் ஒக்டோபர் மாதத்தில் 41 நோயாளர்களும் இனங்காணப்பட்டுள்ளனர்.

இவர்களில் யாழ்ப்பாண மாவட்டத்தில் ஒக்ரோபர்15 தொற்றாளர்களும் வவுனியா மாவட்டத்தில் 14 தொற்றாளர்களும் மன்னார் மாவட்டத்தில் 10 நோயாளர்களும் முல்லைத்தீவில் 2 நோயாளர்களும் இனங்கான பட்டுள்ளார்கள்.

கடந்த இரண்டு நாட்களில் வடக்கு மாகாணத்தில் புதிதாக எவரும் தொற்றுக்கு உள்ளாகவில்லை.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்படுகின்ற பி.சி.ஆர் பரிசோதனைகளில் நேற்று முன்தினம் 378 பேரிடம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. நேற்று 385 பேரிடம் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதிலே தனிமைப்படுத்தல் முகாம்களில், சிகிச்சை நிலையத்தில் இருந்தவர்கள் சிலருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.

புதிதாக வடமாகாணத்தில் எவருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை.

இருந்தாலும் கடந்த வாரத்தில் இனங்காணப்பட்ட நோயாளர்களுடன் நேரடி தொடர்பில் இருந்தவர்களை இனங்கண்டு அவர்களை தனிமைப்படுத்தி அவர்களுக்கான பரிசோதனைகளையும் தற்போது மேற்கொண்டு வருகின்றோம்.

மேலும் வட மாகாணத்தை பொறுத்த வரைக்கும் யாழ்ப்பாணம் மாநகர சபைக்குட்பட்ட பாசையூர் மேற்கு, திருநகர் கிராமங்கள் அதேபோல கரவெட்டி ராஜகிராமம் பிரிவிலும் 4 கிராமங்களும் தனிமைப்படுத்தப் பட்டுள்ளன மேலும் மருதங்கேணி கொரோனா சிகிச்சை நிலையம் கடந்த 19ம் தேதி முதல் இயங்க ஆரம்பித்திருந்தது. 50 நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்திருந்தார்கள். இவர்களில் முதலாவது தொகுதியாக 16 பேர் இரண்டு வார கால சிகிச்சை நிறைவு செய்து இன்று தங்களுடைய வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்கள்.

அதேபோல கிளிநொச்சியில் கிருஸ்ணபுரத்திலும் முல்லைத்தீவு மாங்குளத்திலும் இந்த வாரத்தில் சிகிச்சை நிலையங்கள் இயங்க ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது இலங்கை முழுவதும் இந்த கொரோனா தொற்று மிக தீவிரமாக பரவி வருவதை நாங்கள் அவதானிக்கக்கூடியதாக உள்ளது. தற்போது பரவி வருகின்ற இந்த வைரஸ் மிகவும் வீரியம் மிக்கது. அதன் தாக்கமும் அதிகமாக காணப்படுகிறது.

எனவே பொதுமக்கள் இந்த தொற்று பரவலில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வதற்கு இரண்டு விடயங்களை கட்டாயமாகக் கடைப்பிடிக்க வேண்டும்.

இயலுமானவரை ஒன்று கூடுவதை தவிர்த்துக்கொள்ளவேண்டும். அதற்காக கடந்த வாரம் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெற்ற செயலணி கூட்டத்தின்போது பொதுமக்களின் நடமாட்டங்களை கட்டுப்படுத்துவதற்கான பல தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதாவது முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளி மற்றும் கை கழுவுதல் போன்ற சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றினால் இந்த கொரோனாதொற்று பரம்பலை கட்டுப்படுத்தகூடியதாக இருக்கும் என்றார்.