நீதிபதியின் உத்தரவுக்கமைய மீட்கப்பட்ட உடற்பாகங்கள். தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் போராளியுடையதா?

DSC08499
DSC08499

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் காவல்துறை பிரிவுக்குட்பட்ட கரிப்பட்டமுறிப்பு பகுதியில் மனித எச்சங்கள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டிருந்தது.

முல்லைத்தீவு மாங்குளம் வீதியின் ஒன்பதாவது கிலோ மீட்டர் பகுதியில் கரிப்பட்டமுறிப்பு சந்திக்கு அருகாமையில் உள்ள வி.சிவசுப்பிரமணியம் என்பவரது வயல் காணி துப்பரவு செய்து அந்தக் காணியில் நெற்பயிர்ச் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த காணி பெக்கோ இயந்திரங்கள் மூலம் துப்பரவு செய்யப்பட்டு மீண்டும் உழவு இயந்திரம் மூலம் உழவு செய்யப்பட்டு நெல் விதைக்கப்பட்ட நிலையில் மண்வெட்டி கொண்டு குறித்த வயல் நிலங்களுக்கான வரம்புகளை அமைக்க முற்பட்டபோது வெடிபொருள் இருந்ததை அவதானித்தவர்கள் மாங்குளம் காவல்துறை நிலையத்திற்கு தகவல் வழங்கியிருந்தனர்

இந்நிலையில் கடந்த மூன்றாம் திகதி வெடிபொருளை பார்வையிட சென்ற மாங்குளம் காவல்துறையினர் வெடிபொருளுக்கு அண்மையில் இவ்வாறு மனித எச்சங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் குறித்த பகுதியை அடையாளப்படுத்தி மூன்றாம் திகதி முதல் இன்றுவரை குறித்த பகுதியில் காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்றைய தினம் அகழ்வு பணிகளை மேற்கொள்ள நீதிமன்றில் அனுமதி கோரியிருந்த நிலையில் இன்றைய தினம் குறித்த பகுதியில் அகழ்வு பணிகளை மேற்கொள்வதற்காக தடவியல் காவல்துறையினர், விசேட அதிரடிப்படையினர், சட்ட வைத்திய அதிகாரி உள்ளிட்டவர்கள் அழைக்கப்பட்ட நிலையில் பிற்பகல் 1.30 மணியளவில் முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி எஸ்.லெனின்குமார் அவர்கள் சம்பவ இடத்தை வருகை தந்து நேரில் பார்வையிட்டார்.

குறித்த இடத்தை பார்வையிட்ட நீதிபதி முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய நிபுணர் கே .வாசுதேவா அவர்களுடைய தலைமையில் குறித்த இடத்தில் அகழ்வு பணிகளை மேற்கொள்ளுமாறும் அகழ்வு பணிகளை மேற்கொள்ள காவல்துறையினர் மற்றும் தடயவியல் காவல்துறையினரை ஒத்துழைப்பு வழங்குமாறும் குறித்த இடத்தில் இருக்கின்ற வெடிபொருளை விசேட அதிரடிப்படையினர் அகற்றுவதற்கும் உத்தரவிட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து குறித்த இடத்தில் இருந்த வெடிபொருளை விசேட அதிரடிப்படையினர் அகற்றியதை தொடர்ந்து இன்று குறித்த பகுதியில் இருந்த எச்சங்கள் மீட்பதற்கான அகழ்வு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது

இதனடிப்படையில் குறித்த இடத்தில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினுடைய உறுப்பினர்களுக்கு வழங்கப்படுகின்ற இலக்கத்தகடு சயனைடு குப்பி மற்றும் அவர்களுடைய சீருடையின் பாகங்கள், சப்பாத்தின் பாகங்கள் மற்றும் உடற் பாகங்கள், துப்பாக்கி ரவைகள் என்பன மீட்கப்பட்டுள்ளது

இதனடிப்படையில் மாலை 5 மணிவரை குறித்த இடத்தில் அகழ்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு குறித்த இடத்தில் இருந்த தடய பொருட்கள் அனைத்தும் சட்ட வைத்திய அதிகாரியினால் எடுத்து செல்லப்பட்டிருக்கிறது. இன்றோடு அகழ்வு பணிகள் நிறைவடைந்துள்ள சட்ட வைத்திய அதிகாரிகளின் உடற்கூற்றுப் பரிசோதனைகளின் பின்னர் அறிக்கைகள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

குறித்த இடத்தில் மீட்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தகட்டில் ஐ 1606 என்ற இலக்கம் பொறிக்கப்பட்டுள்ளது குறித்த உடற்பாகங்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினுடைய போராளி ஒருவர் உடையதாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது.