நினைவேந்தல் உரிமையை தடுத்து தமிழ் மக்களை மேலும் சீண்டாதீர்கள் -எதிர்க்கட்சி தலைவர்கள் எச்சரிக்கை

images 12
images 12

போரில் உயிரிழந்தவர்களைப் பொது வெளியில் நினைவேந்த இந்த நாட்டிலுள்ள மூவின மக்களுக்கும் உரிமையுண்டு. அதைத் தடுத்து நிறுத்த அரசுக்கு அதிகாரம் இல்லை. எனவே, நினைவேந்தல் உரிமையைத் தடுத்துத் தமிழ் மக்களை மேலும் சீண்ட வேண்டாம் என்று ராஜபக்ச அரசிடம் கேட்டுக்கொள்கின்றோம் என எதிர்க்கட்சித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க ஆகியோர் கூட்டாகத் தெரிவித்தார்கள்.

மாவீரர் தின நினைவேந்தலைப் பொது வெளியில் நடத்துவதற்கு இடமளிக்க முடியாது. அதை மீறி நடத்தினால் தனிமைப்படுத்தல் சட்டத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கொரோனாத் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா எச்சரிக்கை விடுத்திருந்தார். இது தொடர்பில் கருத்துரைக்கும்போதே அவர்கள் மேற்கண்டவாறு கூறினார்கள்.

இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவித்ததாவது,

போரில் உயிரிழந்த தமது உறவுகளை நவம்பர் 27ஆம் திகதி தமிழ் மக்கள் நினைவுகூர்வது உயிரிழந்த தமிழீழ விடுதலைப்புலிகளுக்குப் புத்துயிர் கொடுக்கும் செயற்பாடு என்று இராணுவமோ அல்லது அரசோ தப்புக்கணக்குப் போடக்கூடாது.

நாட்டில் தற்போது கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்திருப்பதால் சுகாதார வழிகாட்டல்களை முறையாகக் கடைப்பிடித்து அதற்கேற்ற மாதிரி நினைவேந்தல் நிகழ்வுகளில் தமிழ் மக்கள் பங்கேற்க வேண்டும் என தெரிவித்துள்ளார்கள்.