மாவீரர் நினைவு நாள் நிகழ்வு : ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றம் தடை உத்தரவு

image 2020 11 21 112516
image 2020 11 21 112516

யாழ்ப்பாணம் தீவகத்தில் இன்று தொடக்கம் எதிர்வரும் 27ஆம் திகதிவரை ஒன்றுகூடி நிகழ்வுகளை நடத்த ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றம் தடை உத்தரவு வழங்கியுள்ளது. ஊர்காவற்றுறை காவல்துறையினரால் தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பத்துக்கு அமைய, கொரோனா தனிமைப்படுத்தல் சட்டத்துக்கு அமைய நேற்று வெள்ளிக்கிழமை மாலை இந்த தடை உத்தரவு நீதிமன்றினால் வழங்கப்பட்டது.

வேலணை பிரதேச சபை உறுப்பினர் நாவலன் கருணாகரன், அவரது சகோதரர் குணாளன் கருணாகரன், முத்தையாபிள்ளை தம்பிராசா, ரமேஷ், கனகையா மற்றும் மதுஷ் ஆகிய 6 பேரைக் குறிப்பிட்டு இலங்கை குற்றவியல் நடைமுறை சட்டக்கோவை 106ஆம் பிரிவின் கீழ் பொதுத் தொல்லையைத் தடுப்பதற்கும் கொரோனா தொற்று நோய்த் தடுப்பு கட்டளைச் சட்டத்தின் தனிமைப்படுத்தல் பிரிவின் கீழும் ஊர்காவற்றுறை காவல்துறையினரால் நேற்று நீதிமன்றில் விண்ணப்பம் செய்யப்பட்டது.

வேலணை மற்றும் புங்குடுதீவில் மாவீரர் நாள் நிகழ்வுகள் நடத்த ஏற்பாடுகள் உள்ளன என்று தகவல் கிடைத்துள்ளதாக காவல்துறையினர் மன்றில் தெரிவித்தனர்.அத்துடன், பிரதிவாதிகள் சார்பில் சட்டத்தரணிகள் முன்னிலையாகவில்லை.

அதனால் காவல்துறையினரின் விண்ணப்பத்தை ஆராய்ந்த ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றம் கொரோனா நோய்த் தொற்று கட்டளைச் சட்டத்தின் கீழ் ஒன்றுகூடி நிகழ்வுகளை நடத்த தடை உத்தரவு வழங்கியுள்ளது.