முல்லைத்தீவில் இராணுவத்தினரின் கெடுபிடி: ஊடகவியலாளருக்கு ஏற்பட்ட நிலை

IMG 1897
IMG 1897

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு காவல்துறை பிரிவுக்குட்பட்ட தேவிபுரம் பகுதியில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் அவர்களை இராணுவத்தினர் குறித்த இடத்தில் இருந்து வெளியேற மறுத்த நிலையில் புதுக்குடியிருப்பு காவல்துறையினரின் உதவியுடன் குறித்த ஊடகவியலாளர் வெளியேறியுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில்,

இன்று (27) மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வுகளை மேற்கொள்வதற்கு முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றினால் தடையுத்தரவு விதிக்கப்பட்டுள்ள நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் அதிகளவான காவல்துறையினர் ஆயுதம் தாங்கிய இராணுவத்தினர் பாதுகாப்பு கடமைகளில் வீதிகள் மற்றும் பொது இடங்களில் குறிப்பாக மாவீரர் துயிலும் இல்லங்களில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் நீதிமன்ற உத்தரவை நடைமுறைபடுத்தும் முகமாக துயிலுமில்லங்களில் இராணுவத்தினர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை தொடர்பில் செய்தி அறிக்கையிட சென்றநிலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்று இருக்கின்றது.

நேற்று பிற்பகல் தேவிபுரம் மாவீரர் துயிலும் இல்லம் அமைந்திருக்கின்ற வளாகத்திற்கு அண்மையாக சென்ற ஊடகவியலாளர் குறித்த மாவீரர் துயிலும் இல்லத்தை காணொளி பதிவு செய்த போது குறித்த இடத்திற்கு 500 மீட்டர் தொலைவில் நின்ற இராணுவ வீரர்கள் இருவர் குறித்த இடத்திற்கு வருகை தந்து ஊடகவியலாளரோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது தங்களை ஒளிப்பதிவு செய்யக்கூடாது என மிரட்டி ஊடகவியலாளரை குறித்த இடத்தில் இருந்து வெளியேற முடியாதவாறு தடை செய்திருக்கின்றனர்.

இதேவேளை குறித்த பகுதியில் கடமையிலிருந்த இராணுவ சிப்பாய் தன்னுடைய இராணுவ சீருடையை சரியாக அணியாத நிலையிலேயே இவ்வாறு ஊடகவியலாளருடன் வருகை தந்து தர்க்கத்தில் ஈடுபட்டிருந்தமையும் சுகாதார நடைமுறைகளை பேனாதநிலையிலும் இருந்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்திலே தொடர்ச்சியான இந்த செயற்பாடுகள் முல்லைத்தீவில் இராணுவ ஆட்சியா இடம்பெறுகிறது என்ற சந்தேகத்தினை உறுதி செய்கிறது .

அத்தோடு குறித்த இடத்தில் ஊடகவியலாளர் உடன் தர்க்கப்பட்ட இராணுவ சிப்பாய் ஊடகவியலாளர்களின் காணொளி பதிவுகளையோ, தொலைபேசியை கூட பார்க்க முடியும் அதற்க்கு தமக்கு அதிகாரம் உண்டு எனவும் மிரட்டல் விடுத்துள்ளார்.