நாட்டில் நேற்றைய தினம் மொத்தமாக 559 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதனால் இலங்கையில் பதிவான மொத்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையானது 22 ஆயிரத்தையும் கடந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இவ்வாறு நேற்யை தினம் அடையாளம் காணப்பட்ட 559 கொரோனா நோயாளர்களில் 553 பேர் மினுவாங்கொடை – பேலியகொட கொத்தணிப் பரவலில் சிக்கியவர்கள் ஆவர்.
ஏனைய ஆறு பேரில் இருவர் இந்தியர்களும், துருக்கி, மாலைதீவு மற்றும் ஐக்கிய அரபு இராஜ்ஜியம் ஆகியவற்றிலிருந்து வருகை தந்த கப்பலில் தொழில்புரிபவர்கள் ஆவர்.
சுகாதார அமைச்சின் தோற்று நோயியல் பிரிவின் தரவுகள் படி தற்போது நாட்டில் அடையாளம் காணப்பட்ட மொத்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையானது 22,028 ஆகவுள்ளது.
இதேநேரம் நேற்றைய தினம் 369 கொரோனா நோயாளர்கள் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறியுள்ள நிலையில் குணமடைந்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையும் 15,816 ஆக உயர்வடைந்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள 56 வைத்தியசாலை மற்றும் சிகிச்சை நிலையங்களில் 6,116 பேர் சிகிச்சை பெற்று வருவதுடன், கொரோனா தொற்று சந்தேகத்தில் 650 பேர் வைத்தியக் கண்காணிப்பிலும் உள்ளனர்.