சுன்னாகம் காவல்துறையினர் அட்டகாசம்!

02 2
02 2

மல்லாகம் கோட்டைக்காடு சாளம்பை முருகன் ஆலயத்தில் கார்த்திகை விளக்கீடு செய்ய முடியாது என்று கூறி ஆலய இளையவர்களினால் செய்யப்பட்ட எற்படுகளை கால்களினால் தட்டி சுன்னாகம் காவல்துறையினர் அட்டகாசம் செய்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு நேரடியாக சென்ற சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன்,

தமிழ் மக்களின் குறிப்பாக இந்துக்களின் சமய நிகழ்வான கார்த்திகை விளக்கீட்டை செய்யவிடாது சுன்னாகம் காவல்துறையினர் பல ஆலயங்களுக்கு சென்று குழப்பத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது சிங்கள பௌத்த பேரினவாதத்தின் உச்சக்கட்ட அடக்குமுறை.

இதனை வெறுமனே நாம் கைகட்டி வேடிக்கை பார்க்க முடியாது. இதற்கு எதிராக எமது சமய குருமார்கள் அரசியல்வாதிகள் ஊடகங்கள் என எல்லோரும் ஒட்டு மொத்த எதிர்வினையை காலதாமதமின்றி மேற்கொள்ள வேண்டும். மக்கள் துணிச்சலோடு எமது சமய பாரம்பரிய விளக்கீட்டை மேற்கொள்ளுங்கள். நாம் சட்ட ரீதியாக அனைத்துவிதமான பாதுகாப்புக்களையும் வழங்க தயாராக உள்ளோம் என்றார்.

இந்த நிலையில் இந்த விடயம் தொடர்பில் ஈழமக்கள் ஜனாநாயகக் கட்சியின் உறுப்பினர் இ.வி.எஸ் செந்தூரன், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்துக்குக் கொண்டுவந்தார்.

அது தொடர்பில் யாழ்ப்பாண மாவட்டத்துக்குப் பொறுப்பான பிரதி காவல்துறை மா அதிபருடன் உரையாடிய அமைச்சர், இந்துக்களின் பாரம்பரிய வழிபாடான கார்த்திகை தீபத்திரு நாளில் கார்த்திகை தீபங்கள் ஏற்றுவதற்கும் சொர்க்கப்பானை எரிப்பதற்கும் அனுமதியளிக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

மேலும் இந்த வழிபாட்டை சிலர் பிழையாக அர்த்தப்படுத்தி முறைப்பாடுகளை வழங்குவார்கள் என்றும் அமைச்சர், பிரதி காவல்துறை மா அதிபருக்கு எடுத்துக் கூறியிருந்தார்.

அத்துடன், சுன்னாகம் காவல்துறை நிலைய பொறுப்பதிகாரிக்கு அழைப்பை ஏற்படுத்திய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தீபங்களை ஏற்றுவதும் சொர்க்கப்பானை எரிப்பதும் கார்த்திகைத் திருநாளில் இந்துக்களின் மரபு, இதனை பிழையாக அர்த்தப்படுத்தி தடை விதிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.

உடனடியாக அது தொடர்பில் நடவடிக்கை எடுப்பதாக சுன்னாகம் காவல்துறை நிலைய பொறுப்பதிகாரி உறுதியளித்தார்.