கைது செய்யப்பட்ட யாழ் பல்கலை மாணவன் விடுதலை!

VideoCapture 20201129 205721
VideoCapture 20201129 205721

யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பரமேஸ்வரன் ஆலயத்துக்கு நேரே உள்ள பண்பாட்டு வாயிலில் கார்த்திகை தீபம் ஏற்றிய மாணவன் கைது செய்யப்பட்ட நிலையில் காவல்துறையினரால் விடுவிக்கப்பட்டுள்ளார்.

யாழப்பாண பல்கலைக்கழக விஞ்ஞானபீட மாணவன் மசகையா தர்ஷிகன் என்பவரே இவ்வாறு இன்றிரவு 7.45 மணியளவில் கைது செய்யப்பட்டார்.

யாழ்ப்பாண பல்கலைக்கழக வாயிலின் முன்பாக இராமநாதன் வீதியில் அமைந்துள்ள பரமேஸ்வரன் ஆலயத்துக்கு முன்பாக அமைக்கப்பட்டுள்ள பல்கலைக்கழக பண்பாட்டு வாயிலில் இன்று மாலை 6 மணிக்கு தீபங்களை ஏற்றுவதற்கு மாணவர்கள் சிட்டிகளுடன் தயாராகியிருந்தனர்.

பல்கலைக்கழக வளாகத்துக்குள் செல்லும் வாயில்கள் மூடப்பட்டதால் பரமேஸ்வரன் ஆலயத்தில் தீபம் ஏற்ற முடியாத நிலையில் மாணவர்கள் இவ்வாறு பண்பாட்டு வாயிலின் வெளியே தீபங்களை ஏற்ற முற்பட்டனர்.

அதனை அறிந்த காவல்துறையினர் மற்றும் இராணுவத்தினர் அந்த இடத்துக்கு வந்து தீபங்கள் ஏற்றுவதற்கு அனுமதியில்லை என்று தெரிவித்தனர்.

எனினும் மாணவர்கள் தங்கியிருக்கும் விடுதிகளில் தீபங்களை ஏற்றுமாறு காவல்துறையினர், மாணவர்களுக்கு அறிவுறுத்தினர். தமது அறிவுறுத்தலை மீறி தீபங்கள் ஏற்றினால் கைது செய்யப்படுவீர்கள் என்றும் காவல்துறையினர் எச்சரித்திருந்தனர்.

இந்த நிலையில் 7.45 மணியளவில் தீபம் ஏற்றிய விஞ்ஞான பீட மாணவன் கோப்பாய் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு காவல்துறை நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டர்.

கோப்பாய் காவல்துறை நிலையத்துக்குச் சென்ற சட்டத்தரணிகள் வி.திருக்குமரன், வி.மணிவண்ணன் இருவரும் மாணவனை விடுவிக்க பொறுப்பதிகாரியுடன் பேச்சு நடத்தினர்.

மாணவனிடம் வாக்குமூலம் பெற்ற பின்னர் காவல்துறையினர் அவரை விடுவித்தனர்.

மாணவன் கைது விடயம் தொடர்பில் வடக்கு மாகாண மூத்த பிரதி காவல்துறை மா அதிபரின் கவனத்துக்குக் கொண்டு சென்றேன். இந்துக்களின் நிகழ்வை நடத்த முடியாது தடுத்ததுடன், மாணவனை கைது செய்தமை தவறு என்று சுட்டிகாட்டினேன்.

மூத்த பிரதி காவல்துறை மா அதிபர் இன்று இந்துக்களின் கார்த்திகை தீபத்திருநாள் என்று தான் அறிந்திருக்கவில்லை என்றும் மாணவனை உடனடியாக விடுவிப்பதாகவும் உறுதியளித்தார்” என்று யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.

இதேவேளை, மாணவன் கைது செய்யப்பட்டமை பற்றி அறிந்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சிறிசற்குணராசா, கோப்பாய் காவல்துறை நிலைய பொறுப்பதிகாரியுடன் தோடர்புகொண்டு மாணவனின் விடுதலையை வலியுறுத்தியதாகத் தெரிவித்துள்ளார்.