எயிட்ஸ் தினம் குறித்து கவனம் செலுத்த வேண்டியது முக்கியமானது – மஹிந்த ராஜபக்ஷ

mahinda6 626x380 2
mahinda6 626x380 2

கொரோனா தொடர்பில் மாத்திரம் கவனம் செலுத்திவரும் ஒரு சூழ்நிலையிலும், இன்றைய எயிட்ஸ் தினம் குறித்தும் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த அறிக்கையில் அவர் மேலும் கூறியுள்ளதாவது,

எச்.ஐ.வி.தொற்றை முடிவுக்கு கொண்டுவருதல், எதிர்ப்பு திறன் மற்றும் தாக்கத்தை குறைத்தல் என்பதே 2020ஆம் ஆண்டின் எயிட்ஸ் தினத்தின் கருப்பொருளாகும்.

உலகளாவிய நிலையான அபிவிருத்தியை இலக்காகக் கொண்டு 2030ஆம் ஆண்டளவில் உலகளாவிய ரீதியில் எயிட்சை இல்லாதொழிப்பதே நோக்கமாகும்.

அதற்கமைய 2025ஆம் ஆண்டளவில் இந்நாட்டிலிருந்து எயிட்ஸ் நோயை இல்லாதொழிப்பதை இலக்காகக் கொண்டு செயற்படுகின்றோம். அதற்கான தயார்ப்படுத்தல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ள போதிலும், தயார்ப்படுத்தல்களின் மூலம் எயிட்சை இல்லாதொழிக்க முடியாததுடன், அதற்கு தேவையான பலம் மனித சமூகத்தினால் பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும் என்பதை நினைவுபடுத்துகின்றேன்.

அது அனைத்து மனித சமூகத்தினரதும் பொறுப்பாகும். அப்பொறுப்பை நிறைவேற்றுவதற்கு நாம் அனைவரும் கட்டுப்பட வேண்டும். உலகளாவிய ரீதியில் எச்.ஐ.வி.தொற்றாளர்களின் எண்ணிக்கை இதுவரை 37 மில்லியனை தாண்டியுள்ளது. ஆண்டுக்கு 1.7 மில்லியன் பேர் புதிதாக எச்.ஐ.வி. தொற்றுக்கு உள்ளாவதுடன், இலங்கையில் அது ஒரு சதவீதத்திற்கும் குறைவாகும்.

எது எவ்வாறாயினும் எயிட்ஸுக்கு எதிராக போராடுவதற்கும், தடுப்பதற்கும் நாம் உறுதியாக இருக்க வேண்டியதுடன், அது தொடர்பில் பொறுப்புடன் செயற்பட வேண்டும். எச்.ஐ.வி.தொற்றுடைய நபர்கள் சமூகத்தினால் ஒதுக்கப்படாதிருப்பதற்கும், அவர்களை தேவையான சிகிச்சைக்கு உட்படுமாறும் நாம் அறிவிக்க வேண்டும்.

அதனால் எச்.ஐ.வி.தொற்றாளர்கள் தேவையான சிகிச்சைகளை முறையாக முன்னெடுத்து, நோயை கட்டுப்படுத்திக் கொள்வதற்கு எயிட்ஸ் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ள அனைவரும் அது தொடர்பில் கவனம் செலுத்துவதற்கு இன்றைய தினத்தில் மேற்கொள்ளப்படும் அரசாங்கத்தின் விழிப்பூட்டலை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.