கஷ்ட நிலையில் உள்ள மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிய நெல்லியடி மைக்கலின் நேசக்கரம்!

ma 8
ma 8

நெல்லியடி மாலிசந்தை மைக்கல் நேசக்கரம், போரினால் பாதிக்கப்பட்ட மற்றும் வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட நிலையில் கல்வி கற்றுக்கொண்டிருக்கும் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கியுள்ளது.

மைக்கல் விளையாட்டுக்கழக மைதானத்தில் உள்ள கட்டிடத்தில் இன்று (03) ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணிக்கு இச்செயற்பாடு ஆரம்பிக்கப்பட்டது.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த 300 மாணவர்களுக்கு இவ்வருடம் கற்றல் உபகரணங்களை வழங்குவதற்கு மைக்கலின் நேசக்கரம் நடவடிக்கை எடுத்திருந்தது. இதன் முதலாவது கட்டம் இன்று ஆரம்பிக்கப்பட்டது. கொரோனா தாக்கம் காரணமாக உரிய சுகாதார விதிகளைக் கடைப்பிடித்து கட்டம் கட்டமாக கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.

முதற்கட்டமாக இன்று காலை முதல் பிற்பகல் 4.00 மணி வரை 150 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன. ஒரு தடவையில் 10 மாணவர்கள் என்ற அடிப்படையில் வரவழைக்கப்பட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டன. எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மேலும் 150 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்கலின் நேசக்கரம், போரினால் பாதிக்கப்பட்ட மற்றும் வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் செயற்றிட்டத்தை கடந்த 2018 ஆம் ஆண்டு ஆரம்பித்திருந்தது.

அவ்வருடம் 100 மாணவர்களுக்கும் 2019 ஆம் ஆண்டு 280 மாணவர்களுக்கும் கற்றல் உபகரணங்களை வழங்கியிருந்தது. இவ்வருடம் 300 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் 100 மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டிகளும் வழங்கப்படவுள்ளன. இந்தச் சேவையால் பல நூற்றுக்கணக்கான மாணவர்கள் நன்மையடைந்து வருகின்றனர்.

இதேவேளை, மைக்கலின் நேசக்கரம் வடபகுதியில் போரினால் பாதிக்கப்பட்ட மற்றும் வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட குடும்பங்களுக்கு பல்வேறு உதவித்திட்டங்களை வழங்கிவருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.