நீர்கொழும்பில் இருந்து வந்து குருநகர்ப் பகுதியிலுள்ள இறங்குதுறையில் படுத்துறங்கிய இனந்தெரியாதவரால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
நீர்கொழும்பில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் சிங்கள மொழி பேசும் ஒருவர் அப்பகுதியில் சந்தேகத்துக்கிடமாகப் படுத்துறங்குவது மீனவர்களால் அவதானிக்கப்பட்டு பொதுச்சுகாதார உத்தியோகத்தர்கள் மற்றும் காவற்துறையினர் ஆகியோருக்குத் தகவல் வழங்கப்பட்டது.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு இரு தரப்பும் வருகை தந்தபோதும் இனந்தெரியாதவரை அழைத்துச் செல்ல இரு தரப்பும் மறுத்துவிட்டன. இருப்பினும் சுகாதார உத்தியோகத்தர்கள் உடனடியாக அவரது மாதிரியைப் பெற்று பி.சி.ஆர். பரிசோதனைக்கு அனுப்பி வைத்தபோதும் அவரைக் கைதுசெய்யப் காவற்துறையினரும் மறுத்துவிட்டனர். இதனால் நேற்று அப்பகுதியின் ஊடாக மீன்பிடிப் படகுகள் செல்வது தடுக்கப்பட்டு பிறிதொரு பகுதியின் ஊடாக அனுமதிக்கப்பட்டது.
பி.சி.ஆர். மாதிரி பெறப்பட்ட நீர்கொழும்பு வாசி பரிசோதனை முடிவு வரும் வரைக்கும் குருநகர்ப் பகுதியில் ஒரு தனியான இடத்தில் தங்கவைக்கபட்டுள்ளார்.