இலங்கையில் இன்றையதினம் மேலும் 4 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி நாட்டில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 229 ஆக அதிகரித்துள்ளது.
கல்கிசை பகுதியைச் சேர்ந்த 74 வயதுடைய பெண்ணொருவரும் காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த 64 வயதுடைய ஆணொருவரும் வெல்லம்பிட்டி பகுதியைச் சேர்ந்த 76 வயதுடைய ஆணொருவரும் ஒபநாயக்க பிரதேசத்தைச் சேர்ந்த 58 வயதுடைய ஆணொருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
நாட்டில் 47 000 இற்கும் அதிகமானோர் கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள போதிலும் அவர்களில் சுமார் 90 சதவீதமானோர் குணமடைந்துள்ளமை விசேட அம்சமாகும் என்று சுகாதார தரப்பு தெரிவித்துள்ளது.
இன்று சனிக்கிழமை இரவு 8 மணி வரை 535 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். இவர்களில் 18 தொற்றாளர்கள் சிறைச்சாலை கொத்தணியுடனும் எஞ்சியோர் பேலியகொடை கொத்தணியுடனும் தொடர்புடையவர்கள் என்று அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று இனங்காணப்பட்ட தொற்றாளர்களுடன் நாட்டில் மொத்த தொற்றாளர் எண்ணிக்கை 47 840 ஆக உயர்வடைந்துள்ளது.
இவர்களில் 40 838 தொற்றாளர்கள் குணமடைந்துள்ளதோடு 6539 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேவேளை தொற்று அறிகுறிகளுடன் சந்தேகத்தினடிப்படையில் 723 தொற்றாளர்கள் மருத்துவ கண்காணிப்பில் உள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.
இன்று தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள்
கொவிட் – 19 தொற்று பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் பிரதானி இராணுவ தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வாவினால் இன்று சனிக்கிழமை பகல் வேளையிலிருந்து சில பகுதிகள் தனிமைப்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
அதற்கமைய கிரியுல்ல காவற்துறை பிரிவில் பன்னல – மும்மான கிராம உத்தியோகத்தர் பிரிவு (1564) மற்றும் வெத்தேவ கிராம உத்தியோகத்தர் பிரிவு (1563) என்பனவும் பூஜாபிட்டியகாவற்துறை பிரிவில் கொஸ்கொட பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட பிரதேசம் என்பனவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.