ஜே.வி.பி கிளர்ச்சிக்கு ஒரு நீதி , தமிழர்களின் உரிமைப் போராட்டத்திற்கு நீதியற்ற அடக்குமுறையா -கோவிந்தன் கருணாகரம்

jana 701590
jana 701590

இலங்கை அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்காக ஆயுதம் ஏந்தி ஒன்றுக்குப் பல தடவை இந்த நாட்டு முப்படைகளுடன் போரிட்டு முப்படைகளின் வீரர்கள் பலரை, முப்படைகளின் குடும்பங்களைக் கொன்றொழித்து, இலங்கையின் பொருளாதாரத்தை ஸ்தம்பிக்க வைத்த, இலங்கை அரசை சில காலம் நடுங்க வைத்த , இலங்கை அரசால் பயங்கரவாதிகள் என்று முத்திரையிடப்பட்ட ஜே.வி.பி யினருக்கு ஒரு நீதி தமிழர்களின் உரிமைப் போராட்டத்திற்கு நீதியற்ற அடக்குமுறையா? என நாடாளுமன்ற உறுப்பினர்  கோவிந்தன் கருணாகரம் (ஜனா) என்று கேள்வி எழுப்பியுள்ளார்.


யாழ் பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி உடைக்கப்பட்டமைத் தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்து  தெரிவிக்கையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் (ஜனா) இவ்வாறு தெரிவித்தார். 


முள்ளிவாய்க்கால் அவலம் உலக வரலாறு காணாத ஒரு அவலம். சொந்த நாட்டு மக்கள் தமது நாட்டு அரச படைகளால் படுகொலை செய்யப்பட்ட அவலம். உலக வரலாற்றில் இதனை ‘நாசி’ களின் படுகொலைச் செயலோடு ஒப்பிடக்கூடிய ஒரு கொடூர சம்பவம். முள்ளிவாய்க்காலில் மரணித்தவர்கள் விடுதலைப்புலிகள் மாத்திரமல்ல. 
அந் நிகழ்வு அரசாங்கத்தின் அறிவித்தலை நம்பி தாம், தமது குழந்தைகள், உறவுகளின் உயிர்கள் காப்பாற்றப்படும் என்ற மரண பயத்தில்  ஒன்றுகூடிய மக்கள் அரச படைகளின் தாக்குதலால் அவல மரணமடைந்த நிகழ்வு. மரணமடைந்த உறவுகளை நினைவு கூருவது சர்வதேச சட்டங்களால் அங்கீகரிக்கப்பட்ட ஒன்று. நமது நாட்டிலும் அங்கீகரிக்கப்பட்டதே வரலாறு. இலங்கை அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்காக ஆயுதம் ஏந்தி ஒன்றுக்குப் பல தடவை இந்த நாட்டு முப்படைகளுடன் போரிட்டு முப்படைகளின் வீரர்கள் பலரை, முப்படைகளின் குடும்பங்களைக் கொன்றொழித்த, இலங்கையின் பொருளாதாரத்தை ஸ்தம்பிக்க வைத்த, இலங்கை அரசை சில காலம் நடுங்க வைத்த , இலங்கை அரசால் பயங்கரவாதிகள் என்று முத்திரையிடப்பட்ட ஜே.வி.பி யினரை நம் நாட்டு மக்கள் நினைவு கூரலாம். அவர்களுக்கான நினைவுச் சின்னங்கள் அமைக்கலாம் . வருடா வருடம் ‘கார்த்திகை வீரர்’கள் ‘ தினம் கொண்டாடலாம். அவர்கள் செய்த அத்தனையையும் மறந்து மன்னிக்கப்படலாம். 


அவர்களுக்கான நினைவுச் சின்னங்கள் தென் பகுதி பல்கலைக்கழகங்களான வயம்ப, மற்றும் ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகங்களில் வைக்கப்படலாம். அவர்களை நினைவுகூருவது ஒன்றும் தவறல்ல. காரணம் அவர்கள் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள். 


பெரும்பான்மை இனத்தவர்கள் அரசுக்கு எதிராக ஆயுதம் ஏந்தினாலும் மன்னிப்போம். ? எம் அரச படைகளை அழித்தொழித்தாலும் மன்னிப்போம். நாட்டின் பொருளாதாரத்தைச் சீரழித்தாலும் மன்னிப்போம். 
ஆனால் தமிழர்கள் உரிமை, சமத்துவம், சுயாட்சி என்று கோரிக்கை விடுத்தால் அதற்காகப் போராடுபவர்களை மாத்திரமல்ல, உங்கள் இனத்தையே அழித்தொழிப்போம். இதுதான் ஒருநாடு ஒரு சட்டம் என்ற உங்கள் கொள்கையின் வெளிப்பாடாக யாழ் பல்கலைக்கழகத்தில் நடந்த இந்த துர்ப்பாக்கிய சம்பவம். 


அரசு தமிழர் விடயத்தில் தொடர்ச்சியாகத் தவறுகளை விட்டுக் கொண்டிருக்கிறது. பல்கலைக்கழகத் தரப்படுத்தல்தான் போராட்ட இயக்கங்கள் தோன்றுவதற்கான உடனடிக் காரணம். இன்று தமிழ்ப் பல்கலைக்கழக மாணவர்களின் உணர்ச்சியுடன் அரசு  விளையாடுகின்றது.  இந்த விளையாட்டு வினையாகிவிடக்கூடாது என்பது எமது விருப்பம். ஆனால் அரசு எம் தமிழ் மாணவர்களின் உணர்வுகளுடன் விளையாடுகின்றது.

 
எம் தமிழ் மாணவர்களோ, எம் தமிழ் அரசியல்வாதிகளோ, ஒருமித்த பிரிவுபடாத நாட்டில் சமத்துவ உரிமையை மட்டுமே நாடி நிற்கின்றோம்.  இருந்தாலும் எம் இனத்தின் வரலாறுகளையே இல்லாத ஒன்றாக மாற்றிவிடுவதற்கு முயற்சித்துக் கொண்டிருக்கிறது. தொடர்ச்சியாகவே எம் இனத்தின் வரலாற்றுப் பதிவுகள், நினைவுகளை அழிப்பதற்கும் திரிவுபடுத்துவதற்குமே முயற்சிக்கிறது.

 
அந்தவகையில் அரசு, வரலாற்றில் இருந்து எதனையும் இன்னமும் கற்கவில்லை. கற்க விரும்பவுமில்லை. என்பது பதிய வைக்கப்பட்டுக் கொண்டேயிருக்கிறது. இதுதான் அரசின் கொள்கையெனில் நம்நாடு காப்பாற்ற முடியாத படுகுழிக்குள் தள்ளப்படுவது நிச்சயம். இதனை  புரியுமா, அல்லது புரிந்து கொள்ளுமா இந்த அரசு. என அவர் தெரிவித்தார்.